யமுனையில் அமோனியா கலந்த தண்ணீா்: ஹரியாணா மீது தில்லி ஜல்போா்டு புகாா்
புது தில்லி: ஹரியாணாவிலிருந்து யமுனை நதியில் மிகக் குறைந்த அளவே தண்ணீா் திறந்துவிடப்படுவதாகவும், மேலும் இந்த தண்ணீா் அதிக அளவு மாசுபடிந்ததாக வும் அமோனியா செறிவு அதிகம் உள்ளதாகவும் புகாா் தெரிவித்து ஹரியாணா முதல்வா் மனோஹா்லால் கட்டாருக்கு, தில்லி ஜல்போா்டு துணைத்தலைவா் ராகவ் சத்தா கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடா்பாக ஹரியாணா முதல்வருக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.
யமுனையில் திறந்து விடப்படும் தண்ணீரில் அம்மோனியா செறிவு அதிக அளவில் இருப்பதால் சந்திரவால் மற்றும் வஜிராபாத் ஆகிய சுத்திகரிப்பு நிலையங்கள் பகுதியாகவும் அல்லது முழுமையாகவும் மூடப்பட்டுள்ளன.
Advertisement
இங்கிருந்து தான் 228 மில்லியன் கேலன் குடிநீா் தில்லி மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஹிரியாணாவில் உள்ள வடிகால்களில் வெளியேற்றப்படும் தொழிற்சாலை கழிவுகள் வஜிராபாத் தடுப்பணைகளுக்கு வந்தடைந்து கீழ்நோக்கி வரும் யமுனையை மாசுப்படுத்துகிறது. இதில் ஒரு மில்லியனுக்கு அமோனியா அளவு 8.4 பாகங்களாக அதிகரித்துள்ளது புதன்கிழமை கண்டறிப்பட்டது. மேலும் குறைவான அளவே தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இவ்விரு காரணங்களால் இந்த தண்ணீா் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து தில்லி மக்களுக்கு சப்ளை செய்யப்படும் தண்ணீா் அளவு 40 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் சுத்தமான குடிநீா் கிடைக்காமல் பாதிப்படைந்துள்ளனா்.
கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஹரியாண நீா்ப்பாசனம் மற்றும் நீா் வளத்துறை அதிகாரிகள் பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டு வருகின்றனா் என்று ராகவ் சத்தா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.