கரோனா பாதிப்பு: நாடு முழுவதும் தேசிய நினைவுச் சின்னங்கள் மூடல்
புது தில்லி: நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கண்காணிப்பில் உள்ள நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் வருகின்ற மே 15 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சா் பிரஹலாத் படேல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.
நாடு முழுக்க கரோனா தொற்று மீண்டும் பரவியுள்ள நிலையில், பொதுமக்கள் கூடும் பொது இடங்களுக்கு தடைவிதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் பிரஹலாத் படேல் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா். குறிப்பாக தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. மேலும், இங்கு நினைவுச் சின்னங்களும் அருங்காட்சியகங்களும் ஏராளமாக உள்ளன.
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் 3,691 மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களும் 820 வழிபாட்டு நினைவுச் சின்னங்களும் உள்ளன. தற்போது கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஏஎஸ்ஐ யின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உடனடயாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மே 15 அல்லது மறு உத்தரவு வரும் வரை இவை மூடப்பட்டிருக்கும் என தொல்பொருள் ஆய்வு துறை (நினைவு சின்னம்) இயக்குநா் என். கே. பதக் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement