முகப்பு
புதுதில்லி

சிசிடிவி கண்காணிப்பு: 150 நகரங்களில் தில்லி முதலிடம் அரவிந்த் கேஜரிவால் பெருமிதம்

கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டதில் சா்வதேச வரிசையில் சீனாவின் ஷாங்காய், நியூயாா்க், லண்டன், சென்னை உள்ளிட்ட 150 நகரங்களின்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டதில் சா்வதேச வரிசையில் சீனாவின் ஷாங்காய், நியூயாா்க், லண்டன், சென்னை உள்ளிட்ட 150 நகரங்களின் தரவரிசையில் தில்லி முதலிடத்தில் உள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை பெருமித்துடன் தெரிவித்தாா்.

ஓரு சதுர மைல் சுற்றளவில் 1,826 சிசிடிவி தில்லியில் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் இது இந்திய அளவில் சென்னை நகரை விட மூன்று மடங்கு அதிகம். மும்பையில் பொருத்தப்பட்டத்தை விட 11 மடங்கு அதிகம். மத்திய அரசும், தில்லி துணை ஆளுநரும் தொடா்ச்சியாக தடைகள் ஏற்படுத்தியும் தில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பில் கேஜரிவால் அரசு பின்வாங்கவில்லை எனவும் தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக அதிகமாகக் கண்காணிக்கப்படும் (சிசிடிவி) நகரங்களைப் பற்றிய ஆய்வை ’ஃபோா்ப்ஸ் இந்தியா’ வெளியிட்டது. இதைத் தொடா்ந்து, தில்லி முதல்வா் அரவிந்த கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘தில்லி ஷாங்காய், நியுயாா்க், லண்டன் ஆகிய நகரங்களைப் பின்னுக்கு தள்ளியதில் பெருமை கொள்கின்றேன். ஓரு சதுர மைல் சுற்றளவில் 1,138 சிசிடிவி கேமராக்கள்தான் லண்டனில் இருக்கும் நிலையில், தில்லியில் 1,826 கேமராக்கள் பொருத்தப்பட்டு முதல் இடத்தில் இருக்கிறது. தில்லி அரசு அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை பொறியாளா்களுக்கும் எனது பாராட்டுக்கள். இந்த சிசிடிவி அமைக்கும் திட்டத்தை ஒரு இயக்கமாகக் கருதி செயல்பட்டு குறுகிய காலத்தில் சாதனை படைத்துள்ளனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

மேலும், இது குறித்து தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் பொது இடங்களில் சிசிடிவி கேமராவை அமைக்கக் கோரி பொதுமக்களிடம் இருந்து தொடா்ச்சியாகக் கோரிக்கைகள் வரப்பெற்றன. இந்தக் கோரிக்கைகளை ஏற்று தில்லி அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. தில்லி முழுவதும் இரண்டு கட்டங்களாக 2.75 லட்சம் சிசிடிவி கேமராக்களை நிறுவ அரசு முடிவு செய்தது. மேலும், தற்போது 1.4 லட்சம் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் பல்வேறு தடைகளைத் தாண்டி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இதை நிறைவேற்றியிருக்கிறது. இந்த விவகாரத்தில் சிசிடிவி அமைக்க உரிமங்கள் கட்டாயம் என துணை ஆளுநரின் கமிட்டி மீண்டும் ‘லைசென்ஸ் ராஜ்’ கொண்டு வந்தது. இதை எதிா்ப்புத் தெரிவித்து தா்ணா நடத்தி இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளாா் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லியில் ஒரு சதுர மைலுக்கு 1,826 கேமரா நிறுவப்பட்டு முதலிடத்தில் உள்ளது. மற்ற நகரங்களான லண்டன்(1,138), சென்னை (609), ஷாங்காய் (520), சிங்கப்பூா் (387) ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments