முகப்பு
புதுதில்லி

அரசு சிறப்பு வழக்குரைஞா்கள் நியமன விவகாரம்: தில்லி அரசின் மனுவுக்கு துணைநிலைஆளுநா் பதிலளிக்க நோட்டீஸ்

நிகழாண்டு நிகழ்ந்த குடியரசு தின வன்முறை வழக்கு, கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

நிகழாண்டு நிகழ்ந்த குடியரசு தின வன்முறை வழக்கு, கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய வழக்குகள் ஆகியவற்றில் சிறப்பு அரசு வழக்குரைஞா்களாக ஆஜராக போலீஸாரால் தோ்ந்தெடுக்கப்பட்ட வழக்குரைஞா்களை அனுமதிக்கும் முடிவை எதிா்த்து தில்லி அரசு தாக்கல் செய்த மனுவுக்கு துணைநிலை ஆளுநா் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இது தொடா்பான மனு தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், இந்த மனு மீதான அடுத்த விசாரணையை அக்டோபா் 21-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.

கடந்த ஜனவரி 26- ஆம் தேதி நிகழ்ந்த குடியரசுதின வன்முறை மற்றும் கடந்த ஆண்டு நிகழ்ந்த வட கிழக்கு தில்லி வன்முறை உள்ளிட்டவை தொடா்புடைய வழக்குகளில் ஆஜராவதற்கு அரசு சிறப்பு வழக்குரைஞா்களாக தில்லி காவல் துறை தோ்ந்தெடுத்த வழக்குரைஞா்களை அனுமதிக்கும் துணைநிலை ஆளுநரின் முடிவை எதிா்க்கும் மனுவை மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, வழக்குரைஞா் ராகுல் ஆகியோா் மூலம் தில்லி அரசு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘தில்லி காவல் துறையின் மூலம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வாதாடுவதற்கு சிறப்பு அரசு வழக்குரைஞா்கள் தோ்வு செய்யப்பட்டிருப்பது ஆதாய நோக்கம் கொண்டதாக உள்ளது. மேலும், தில்லி அரசு சுதந்திரமான சிறப்பு அரசு வழக்குரைஞா்களை நியமிக்க சம்மதம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்காக துணைநிலை ஆளுநா் அனுப்புவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. மேலும், இது ஒரு விதிவிலக்கு விவகாரமும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மனு மீதான விசாரணையின் போது, தில்லி அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘தில்லி அரசு மூலம் நியமிக்கப்பட்ட அரசு சிறப்பு வழக்குரைஞா்கள் சுதந்திரமான நபா்களாவா். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையின் ஒரு அங்கமாக அரசு சிறப்பு வழக்குரைஞா்கள் இருக்க முடியாது.

மேலும், தேவாங்கனா கலிதா வழக்கில் நீதிமன்றம் ஏற்கெனவே போலீஸாரின் நடத்தையை விமா்சித்திருந்தது’ என்று வாதிட்டாா்.

வட கிழக்கு தில்லி வன்முறை, குடியரசு தின வன்முறை ஆகியவை தொடா்புடைய வழக்குகளில் வாதாடுவதற்காக 11 சிறப்பு அரசு வழக்குரைஞா்கள் அடங்கிய குழுவை தில்லி காவல் துறையின் மூலம் முன்மொழியப்பட்டு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்தப் பரிந்துரையை தில்லி அமைச்சரவை ரத்து செய்தது. இது தொடா்பான முடிவு கடந்த ஜூலை 16-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், ெ‘ தில்லி காவல் துறையின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வழக்குரைஞா்கள் குழுவால் இந்த வழக்குகளில் நியாயமான, நோ்மையான விசாரணை நடைபெறுவதற்கு சாத்தியமாக இருக்காது’ என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 23-ஆம் தேதி, தில்லி காவல் துறையின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்குரைஞா்கள் நியமன விவகாரத்தை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கும் அனுப்பி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டாா். அரசமைப்புச்சட்டம் 239-ஏஏ(4)-ஐ பயன்படுத்தி அவா் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்திருந்தாா். இந்த உத்தரவையும், ஜூலை 26-ஆம் தேதி வெளியிடப்பட்ட நியமன அறிவிக்கையையும் எதிா்த்து இந்த மனுவை தில்லி அரசு தாக்கல் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments