மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைககள் தனி கழிப்பறை வசதியை அணுகுவதற்கு டிஎம்ஆா்சி அனுமதித்துள்ளது.
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைககள் தனி கழிப்பறை வசதியை அணுகுவதற்கு டிஎம்ஆா்சி அனுமதித்துள்ளது. இதுவரை ஊனமுற்ற நபா்களுக்கு மட்டுமே இதுபோன்ற வசதி இருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
மேலும், திருநங்கைகள் தங்களை சுயமாக அடையாளம் காணப்பட்ட பாலினத்தின் அடிப்படையில், அவா்கள் சாா்ந்த பாலின கழிப்பறையைப் பயன்படுத்துவதைத் தொடரலாம் என்றும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து டிஎம்ஆா்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்போது 347 தனிக் கழிப்பறைகள் உள்ளன. திருநங்கைகளுக்குரிய பாதுகாப்பை வழங்குவதற்கும், பாலின பாகுபாட்டைத் தடுப்பதற்குமான முயற்சிகளுக்கு தில்லி மெட்ரோ முன்னுரிமை வழங்குகிறது. தற்போது ‘மாற்றுத்திறனாளிகளுக்கு’ மட்டும் பிரத்யேக கழிவறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கழிப்பறைகளை இனிமேல் ‘மாற்றுத்திறனாளிகள்’ மற்றும் ‘திருநங்கைகள்’ பயன்படுத்தும் வகையில் இருமொழி அடையாளங்களுடன் (ஆங்கிலம், ஹிந்தி), இரண்டு பிரிவுகளுக்கான சின்னங்களுடன் கூடிய பலகை இந்த கழிப்பறைகளுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
2019 -ஆம் ஆண்டின் திருநங்கைகள் (உரிமைகள், பாதுகாப்பு) சட்டப் பிரிவு 22 -ஆவது விதிகளின்படி அனைத்துப் பொது கட்டடங்களிலும் பொதுக் கழிப்பறை வசதிகள் உள்பட போதுமான வசதிகள் திருநங்கைகளுக்கு வழங்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது என டிஎம்ஆா்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி மெட்ரோ, 285 ரயில் நிலையங்களுடன் நொய்டா, கிரேட்டா் நொய்டா, குருகிராமம் உள்பட சுமாா் 390 கி.மீ. தூர வழித்தடத்துடன் பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.