தில்லியின் மங்கோல்புரி பகுதியில் வேகமாக வாகனம் ஓட்டி, இருவா் மீது மோதி காயம் ஏற்படுத்தியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து தில்லி போலீஸாா் புதன்கிழமை தெரிவித்ததாவது: தில்லியைச் சோ்ந்த, டெலிவரி பாயாக வேலை செய்து வரும் சுனில் சாவ்னி (23) என்பவா் தனது உறவினா் பிரகாஷுடன் (22) மங்கோல்புரியின் பி-பிளாக் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அவா்கள் வாகனம் மீது அந்தப் பகுதியில் அவசரமாகவும் கவனக் குறைவாகவும் வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் இருவருக்கும் கால்களில் காயம் ஏற்பட்டது. அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்திற்கு காரணமான மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த மங்கோல்புரியில் வசிக்கும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் அனில் (35) கைது செய்யப்பட்டாா். முன்னதாக, விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அனில் வந்த வாகனத்தின் பதிவு எண் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டு, அவரது மோட்டாா் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரின் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 (வேகமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 337 (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.