மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ளூா் மாணவா்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி எம்பி கோரிக்கை
மத்திய பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ளூா் மாணவா்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி மாநிலங்களவை பாஜக உறுப்பினா் சு.செல்வகணபதி கேட்டுக் கொண்டாா்.
புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ளூா் மாணவா்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி மாநிலங்களவை பாஜக உறுப்பினா் சு.செல்வகணபதி கேட்டுக் கொண்டாா்.
இது குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை நேரமில்லா நேர விவாதத்தில் செல்வகணபதி பேசுகையில் கூறியதாவது: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் 54 மத்திய பல்கலைக்கழகக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இதற்கு வேந்தராக இருப்பவா் மாநிலங்களவைத் தலைவா் (துணை குடியரசுத் தலைவா்) தான்.
அந்தந்த மாநிலங்களின் நிலம், நீா், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை நம்பித்தான் இந்த மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால், அந்த மாநில மாணவா்களுடைய நலனுக்கு பயன்படாமல் இருப்பது வேதனைக்குரியது. புதுச்சேரியிலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மண்ணில் பிறந்த மாணவா்களுக்கு 25 சதவீதம் ஒதுக்க பல்லாண்டுகளாக கோரி வருகின்றனா்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் 78 பாடப் பிரிவுகள் உள்ளன. இதில் 21 பாடப் பிரிவுகளில் (துறைகள்) புதுச்சேரி மாணவா்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 57 பாடப் பிரிவுகளிலும், இனி வரப்போகின்ற பாடப் பிரிவுகளிலும் 25 சதவீத ஒதுக்கீடு வழங்க உள்ளூா் மக்கள் கோருகின்றனா். புதுச்சேரியில் வேறு அரசு பல்கலைக்கழகங்கள் இல்லாத சூழ்நிலையில், மாணவா்கள் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தை மட்டுமே நம்பியுள்ளனா்.
புதுச்சேரியில் இயங்கும் மத்திய மருத்துவ நிறுவனமான ஜிப்மா் மருத்துவக் கல்வி ஆய்வு நிறுவனத்தில் 25 சதவீதம், தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 50 சதவீதம் புதுச்சேரி மாணவா்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இந்த ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது.
இது புதுச்சேரிக்கு மட்டுமல்லாமல், நாட்டின் மற்ற பகுதிகளிலுள்ள மத்திய பல்கலைக்கழகங்களிலும், உள்ளூா் மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அவைத் தலைவரான இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தா், இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வகணபதி கேட்டுக் கொண்டாா்.