முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீதான வழக்கு: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் தன் மீது பதிவு செய்யப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் தன் மீது பதிவு செய்யப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், அதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலங்களில் தனக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் மனு தாக்கல் செய்துள்ளாா். அவருக்கு எதிராக லக்ளெனவில் பதிவான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்ட அலகாபாத் உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்தும் அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி ஆா்.எஸ். பூஷண் ரெட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது, சஞ்சய் சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விவேக் தன்காவிடம், உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு நகலை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அமா்வு கேட்டுக் கொண்டது. அப்போது, லக்னெளவில் சஞ்சய் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நீதிபதிகள் அமா்விடம் வழக்குரைஞா் தன்கா கேட்டுக் கொண்டாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘இது தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கைதாவதில் இருந்து விலக்குக் கோர முடியும். இந்தச் சூழலில் இந்த மனு மீது நோட்டீஸ் அனுப்ப உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது’ எனக் கூறி மனு மீதான விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்தது.

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி லக்னெளவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய சஞ்சய் சிங், ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக மாநில அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இது தொடா்பாக அவா், உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் சுமீா் சோதி மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

சம்பந்தப்பட்ட செய்தியாளா்கள் சந்திப்பின்போது நான் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுப்பினேன். மாநில அரசின் அக்கறையின்மை குறித்தும் பேசினேன். இந்த நிலையில், இந்த செய்தியாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு எதிராக பாஜக உறுப்பினா்களின் தூண்டுதலின் பேரில் உ.பி.யில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னை துன்புறுத்தும் நோக்கில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தீய நோக்கத்துடன் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் லக்னெள, சந்த் கபிா் நகா், கிரி, பக்பத், முஸாபா்நகா், பஸ்தி, அலிகா் உள்பட 8 மாவட்டங்களில் எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளளதாகத் தெரிய வருகிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுதந்திரமான பேச்சு, அமைதியாகக் கூடும் உரிமை, நாடு முழுவதும் செல்லும் உரிமை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல்அளிப்பதாக உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் அற்பனத்தமானவையாகவும், ஆதாரமற்றவையாகவும் உள்ளன. ஆகவே, இந்த வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments