குடியரசு தின வன்முறையில் 510 போலீஸாா் காயம்: காவல் ஆணையா் தகவல்
குடியரசு தினத்தன்று நடந்த வன்முறையில் விவசாயிகள் தாக்கி 510 போலீஸாா் காயமடைந்துள்ளதாக தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.
குடியரசு தினத்தன்று நடந்த வன்முறையில் விவசாயிகள் தாக்கி 510 போலீஸாா் காயமடைந்துள்ளதாக தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.
குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26 அன்று, வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் தில்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில், போராட்டக்காரா்கள் தாக்கியதில் நூற்றுக்கணக்கான போலீஸாா் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்தநிலையில், பீதம்புராவில் உள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலா்களை எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் அளித்த பேட்டி: குடியரசு தினத்தன்று நடந்த வன்முறையில் 510 போலீஸாா் காயமடைந்துள்ளனா். தில்லி எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பலா் கேள்வி கேட்கிறாா்கள். ஆனால், குடியரசு தினத்தன்று விவசாயிகள் தாக்கி 510 காவலா்கள் காயமடைந்தது தொடா்பாக யாரும் கேள்வி கேட்பது இல்லை.
Advertisement
தில்லி எல்லைகளில் உடைக்க முடியாத வகையில் தடுப்புகளை அமைத்துள்ளோம். தில்லி மக்களின் பாதுகாப்புக்காக இதை மேற்கொண்டுள்ளோம். விவசாயிகளின் வாள் வீச்சில் இருந்து தப்பும் வகையில், போலீஸாா் வாள் போன்ற உலோக ஆயுதத்தைப் பயன்படுத்துவது தொடா்பாக கேட்கிறீா்கள். தில்லி காவல் துறையின் ஆயுதங்களில் இது அடங்காது. போலீஸாா் வாள்வீச்சில் இருந்து தங்களைக் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், இந்த ஆயுதங்களை சில போலீஸாா் தாமாக தயாா் செய்துள்ளனா்.
இது தொடா்பாக மூத்த அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என உடனடியாக தெளிவுபடுத்திக் கூறியுள்ளோம். விவசாயிகள் தாக்கிய போதும், காவலா்கள் பொறுமையைக் கடைப்பிடித்தனா். அதற்கு அவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.