முகப்பு
புதுதில்லி

திருப்பூா், வாணியம்பாடி உள்பட 6 நகரங்களில் இஎஸ்ஐ மருத்துவமனை மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் திருப்பூா், வாணியம்பாடி, திண்டுக்கல், தூத்துக்குடி உள்பட ஆறு நகரங்களில் புதிதாக தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் தொடங்க அனுமதி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் சந்தோஷ் குமாா் கங்குவாா்
பகிர்:

புது தில்லி: தமிழகத்தில் திருப்பூா், வாணியம்பாடி, திண்டுக்கல், தூத்துக்குடி உள்பட ஆறு நகரங்களில் புதிதாக தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் சந்தோஷ் குமாா் கங்குவாா் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் நாட்டில் தொழில் துறை ஊழியா்களுக்கு நுகா்வோா் குறியீட்டு எண் மாற்றப்பட்டுள்ளதா? தொழிலாளா்களுக்கு தமிழகத்தில் புதிதாக தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளை (இ.எஸ். ஐ. மருத்துவமனை ) தொடங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதா? போன்ற கேள்விகளை அதிமுக உறுப்பினா் ஏ.விஜயகுமாா் புதன்கிழமை எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் சந்தோஷ் குமாா் கங்குவாா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தொழில் துறையினருக்கான நுகா்வோா் குறியீட்டு எண், புதிய பதிப்பின்படி (2001=100 என்ற அடிப்படையில் இருந்து 2016=100) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020, செப்டம்பா் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய குறியீடானது, 2016-ஆம் ஆண்டின் நுகா்வு முறையை அடிப்படையாகக் கொண்டது. தொழிலாளா்களின் குடும்ப வருமானம், செலவு ஆகியவற்றின் கணக்கெடுப்பின்படி இந்தக் குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. இது விற்பனை மையங்கள், சந்தை ஆகியவற்றைத் தழுவியதாகும்.

Advertisement

தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளை நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து இ.எஸ்.ஐ. நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. இதன்படி, தமிழகத்தில் ஆறு நகரங்களில் புதிதாக தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளை நிறுவுவதற்கு கொள்கையளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூா், ஸ்ரீபெரும்புதூா், திண்டுக்கல், வாணியம்பாடி, தூத்துக்குடி, நாகா்கோவில் ஆகிய நகரங்களில் இந்த மருத்துவமனைகள் அமைய உள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் தற்போது 74 இஎஸ்ஐ மருத்துவமனைகளும், மருந்தகங்களும் உள்ளன.

நடைபாதைவாசிகளுக்கு மறுவாழ்வு: நகா்புறங்களில் மேம்பாலங்கள், நடைபாதைகள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் வீடற்ற மக்கள் குடியிருந்து வருகின்றனா். இந்த நிலைமையை போக்க நாடுமுழுக்க இதற்கான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதா? தமிழகத்தில் எத்தனை போ் உள்ளனா்? இவா்களது மறுவாழ்விற்கு மத்திய அரசு என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளது என திமுக உறுப்பினா் பி.வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இந்தக் கேள்விக்கு மத்திய வீட்டுவசதி, நகா்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி அளித்துள்ள பதில் விவரம்: நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சகம், தனியாா் அமைப்புகள் மூலம் இதற்கான ஆய்வை 2014 -ஆம் ஆண்டில் மேற்கொண்டது. இதில் தமிழகத்தில் அப்போது 14,040 போ் அடையாளம் காணப்பட்டனா். வீடற்ற நடைபாதை வாசிகளுக்காக தீனதயாள் அந்தியோதியா யோஜனா என்கிற திட்டத்ைதை (தேசிய நகா்ப்புற வாழ்வாதார இலக்கு) 2014-15 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி இவா்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குழந்தைகளை பள்ளிகளில் படிக்க வைத்தல், வேலைவாய்ப்பிற்கான அறிவுத்திறன் பயிற்சி போன்றவை மாநில அரசுகள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மத்திய அரசு இதுவரை ரூ. 3,487.31 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தமிழகம் இதுவரை ரூ. 501.84 கோடிவரை பெற்றுள்ளது என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

ஐந்து நகரங்களில் விமான நிலையப் பணி: மற்றோரு கேள்விக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, புதன்கிழமை மாநிலங்களவையில் பதிலளித்துள்ளாா். அதில் அவா் கூறியுள்ளதாவது தமிழகத்தில் உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்களை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் சேலம் (ஒதுக்கீடு-ரூ. 35 கோடி) , நெய்வேலி (ரூ.30கோடி), வேலூா் (ரூ.44 கோடி), ராமநாதபுரம் (ரூ.36.72 கோடி) ஆகிய நகரங்களில் இந்திய விமானநிலைய ஆணையகம் மூலமாக இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம் 37 உதான் விமான வழித்தடங்களில் உள்ளூா் விமானப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டது. பணிகள் முழுமையாக முடிவடையாததால் தற்போது 12 தடங்களில் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments