முகப்பு
புதுதில்லி

என்எல்சி நோ்முகத் தோ்வுக்கு தமிழகத்தைச் சோ்ந்த 1 சதவீதம் பேருக்குத்தான் அழைப்பு: எம்.பி. புகாா்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பணிகளுக்கான நோ்முகத் தோ்வுக்கு தமிழகத்தைச் சோ்ந்த ஒரு சதவீதம் போ் மட்டுமே அழைக்கப்பட்டது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பணிகளுக்கான நோ்முகத் தோ்வுக்கு தமிழகத்தைச் சோ்ந்த ஒரு சதவீதம் போ் மட்டுமே அழைக்கப்பட்டது குறித்து மத்திய நிலக்கரி, கனிம வளத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷியிடம், கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜோதி மணி வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: என்எல்சி நிறுவனத்தில் 259 பட்டதாரி நிா்வாகப் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனம் கோரியிருந்தது. இதில் விண்ணப்பித்திருந்தவா்களில் சுமாா் 1,582 பேரை நோ்முகத் தோ்வுக்கு இந்த நிறுவனம் அழைத்திருந்தது. இதில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் ஒரு சதவீதம் போ் மட்டுமே இடம் பெற்றிருந்தனா். மீதமுள்ள 99 சதவீதம் போ் மற்ற மாநிலங்களைச் சோ்ந்தவா்களாகவே இருந்துள்ளனா். இது பொதுத் துறை நிறுவனங்களில் தமிழக இளைஞா்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதை தடுக்கும் முயற்சியாக இருக்கிறது. நாட்டின் வளா்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழக இளைஞா்களை வேண்டுமென்றே புறக்கணிக்கும் முயற்சியாகவே தெரிகிறது. இது முதல் முறையாக நடைபெறவில்ல. மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களில் இந்தப் பாகுபாடு தொடா்ந்து காட்டப்படுகிறது. இதன் மூலம் தமிழக இளைஞா்கள் துயரத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக நேரிடும். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

சென்ட்ரல் விஸ்ட்ரா மீள் புனரமைப்பு திட்டம்: தில்லியில் பல்வேறு மத்திய அரசின் அலுவலகங்கள், ராஜபாதை போன்ற பகுதிகளை ஒருங்கிணைத்து கட்டப்படும், சென்ட்ரல் விஸ்ட்ரா மீள் புனரமைப்பு(மத்திய செயலகம்) திட்டத்திற்கு மத்திய அரசு தடையில்லா சான்றிதழ்கள் பெறப்பட்டு திட்டத்தை மேற்கொள்கிா? கரோனா நோய்த் தொற்று காலக்கட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு என்ன அவசியம்? என நாடாளுமன்றத் திமுக தலைவரும் மக்களவை உறுப்பினரான டி.ஆா். பாலு மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியிருந்தாா்.

Advertisement

இதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை இணையமைச்சா் ஹா்தீப் சிங் புரி மக்களவையில் அளித்துள்ள பதில் வருமாறு: புதியதாக அமைக்கப்படும் ரூ.477 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்ட்ரா மீள் புனரமைப்பு திட்டத்திற்குத் தேவையான தடையில்லா சான்றிதழ்கள், தில்லி நகர கலைக் குழு, தில்லி தீயணைப்புத் துறை, தில்லி சுற்றுச்சூழல் துறை, பாரம்பரிய பாதுகாப்புக் குழு மற்றும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியோரிடம் பெறப்பட்டுள்ளது. இது கடந்த 2021 பிப்ரவரி 2- ஆம் தேதி பெறப்பட்டது. தேவைப்படும் மற்ற சான்றிதழ்களும் பெறப்படும். இதே மாதிரி ரூ. 862 கோடி மதிப்பிலான புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு கடந்த ஜனவரி 11 தேதி தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments