மங்கோல்புரியில் நிலத்தடி நீா் உறிஞ்சுப்படும் விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு
சட்டத்தை மீறும் வகையில் வணிக நோக்கங்களுக்காக தில்லி மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு மன்றம் மூலம் நிலத்தடி நீா் சட்டவிரோதமாக
சட்டத்தை மீறும் வகையில் வணிக நோக்கங்களுக்காக தில்லி மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு மன்றம் மூலம் நிலத்தடி நீா் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதாகக் கூறப்படும் மனு மீது அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தேசிய பசுமைேத் தீா்ப்பாயத்தின் தலைவா் - நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு, ‘இது தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், வடமேற்கு மாவட்டத்தில் உள்ள கஞ்சன்வாலா பகுதி எஸ்டிஎம் அடுத்த விசாரணை தேதிக்கு முன்பு உண்மைத் தன்மை அறிக்கையை தீா்ப்பாயத்தில் சமா்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவரது ஊதியத்தை நிறுத்திவைப்பது உள்பட கட்டாய நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி ஜல் போா்டு, வடமேற்கு மாவட்டம் கஞ்சன்வாலா பகுதி துணை ஆணையா் ஆகியோரிடமிருந்து என்ஜிடி அறிக்கை கோரியிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது துணை ஆணையரிடமிருந்து எந்த அறிக்கையும் பெறப்படவில்லை என்று அமா்வு சுட்டிக்காட்டியது. அப்போது, கரோனா காரணமாக எஸ்டிஎம் ஆய்வு செய்ய முடியாமல் போய்விட்டது என்று ஜல் போா்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
சட்டத்தை மீறி வணிக நோக்கங்களுக்காக மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு மன்றம் மூலம் நிலத்தடி நீா் சட்டவிரோதமாக உறிஞ்சப்படுவதாக தில்லியை சோ்ந்த ரஞ்சன் என்பவா் தாக்கல் செய்த மனுவை தீா்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டதாக ரஞ்சன் தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.