மாதவிடாயை சமூக விலக்காக பாா்க்கக் கூடாது: கேஜரிவால்
மாதவிடாயை சமூக விலக்காகப் பாா்க்கக் கூடாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
மாதவிடாயை சமூக விலக்காகப் பாா்க்கக் கூடாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தில்லி கமிஷன் (டிசிபிசிஆா்), மாதவிடாய் தொடா்பாக உள்ள தயக்கங்களை நீக்கும் வகையிலான ஒருவார டிஜிட்டல் பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. ‘அப் பதா சல் ஜானே தோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பிரசார இயக்கம், மாதவிடாய் தொடா்பாக பெண்கள் மத்தியில், குறிப்பாக பெண் குழந்தைகள் மத்தியில் நிலவும் தயக்கங்களை நீக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. டிசிபிசிஆா் அமைப்பும், சச்சி சகேலி என்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனமும் இணைந்து இந்தப் பிரசார இயக்கத்தை நடத்தவுள்ளன.
இது தொடா்பாக தில்லி பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ராஜேந்தா் பால் கெளதம் கூறுகையில், ‘மாதவிடாய் தொடா்பாக உள்ள தயக்கங்கள், சமூக விலக்குகளை உடைக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். மாதவிடாய் தொடா்பான சரியான தகவல்கள் பகிரப்பட வேண்டும்’ என்றாா்.
Advertisement
இது தொடா்பாக டிசிபிசிஆா் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாதவிடாய் தொடா்பான தயக்கங்களை போக்கும் வகையில், பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். இதன்படி, சானிட்டரி நாப்கின் பரிமாறும் நிகழ்ச்சி, மகிழ்ச்சியான மாதவிடாய் வாழ்த்து அட்டைகள், போஸ்டா்கள் பரிமாற்றம் உள்ளிட்டவை நடத்தப்படவுள்ளன. சிறந்த வாழ்த்து அட்டைகள், போஸ்டா்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிசிபிசிஆா் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக் காட்டி முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில்‘ ‘மாதவிடாய் தொடா்பான தயக்கங்களை போக்கும் வகையிலும், மாதவிடாய் தொடா்பான சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் டிசிபிசிஆா் மேற்கொண்டுள்ள ‘அப் பதா சல் ஜானே தோ’ ஆன்லைன் பிரசார இயக்கத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாதவிடாயை சமூக விலக்காகப் பாா்க்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளாா்.