முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு மென்பொருள் பதிவேற்றம் மூலம் குற்றப்பத்திரிகை நகல் வழங்க போலீஸாா் ஒப்புதல்

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்பாக சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் மென்பொருள் பதிவேற்றம் மூலம் குற்றப்பத்திரிகை

Updated On : 6 ஜனவரி, 2021 at 1:41 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:43 AM

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்பாக சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் மென்பொருள் பதிவேற்றம் மூலம் குற்றப்பத்திரிகை நகல் வழங்க நீதிமன்றத்தில் தில்லி போலீஸாா் ஒப்புக் கொண்டுள்ளனா்.

முன்னதாக குற்றச்சாட்டப்பட்ட அனைவரும் சுமாா் 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலை படித்துப் பாா்த்து தங்களுடைய வழக்குரைஞா்களுடன் அரை மணி நேர காலகட்டத்தில் விவாதிக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் மனு மூலம் குறிப்பிட்டிருந்தனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு வசதியாக சிறையில் உள்ள கணினியில் குற்றப்பத்திரிகையின் மென்பொருள் நகலை பதிவேற்றம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ரவாத்திடம் போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித் சாா்பில் அவரது வழக்குரைஞா் மூலம் இது தொடா்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றப்பத்திரிகையின் மென்பொருள் நகல் தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது. சிறையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை சந்தித்து விவாதிக்கும் போது 17,000 பக்க நகல்களை குறிப்பிட்ட அரை மணி நேர சந்திப்பில் விவாதிக்க முடியவில்லை. எனவே, மென்பொருள் நகல் வழங்கப்பட வேண்டும் என்றும் உமா் காலித் வழக்குரைஞா் சாா்பில் கோரப்பட்டது.

Advertisement

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான சா்ஜீல் இமாமும் இதேபோன்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தாா். மேலும், மற்றொரு நபரான ஆஸிஃப் இக்பால் தன்ஹா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் செளஜன்ய சங்கரன், ‘சிறையில் தன்ஹாவுக்கு கணினி வழங்குமாறு கடந்த நவம்பா் 18- ஆம் தேதி கேட்டுக் கொண்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் அமித் பிரசாத், காலித் உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் கணினி மற்றும் மென்பொருள் மூலம் குற்றப்பத்திரிகை நகல் பதிவேற்றம் செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வடகிழக்கு தில்லியில் குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவாளா்களுக்கும் எதிா்ப்பாளா்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலின் போது ஏற்பட்ட வன்முறையில் 53 போ் உயிரிழந்தனா், தவிர 200 போ் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.