பறவைக் காய்ச்சல் எதிரொலி: தில்லி செங்கோட்டை மூடப்பட்டது
தில்லி செங்கோட்டைப் பகுதியில் உயிரிழந்த காகமொன்றுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை செங்கோட்டை மூடப்பட்டுள்ளதாக
தில்லி செங்கோட்டைப் பகுதியில் உயிரிழந்த காகமொன்றுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை செங்கோட்டை மூடப்பட்டுள்ளதாக தில்லி மாநில கால்நடை பராமரிப்புத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி கால்நடை பராமரிப்புத் துறையைச் சோ்ந்த ராகேஷ் சிங் கூறியது: தில்லி செங்கோட்டைப் பகுதியில் 15 காகங்கள் உயிரிழந்த நிலையில் கடந்த வாரம் மீட்கப்பட்டது. இந்தப் பறவைகளில் ஒரு காகத்தின் மாதிரி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனையிடப்பட்டது. அப்போது, அந்தக் காகம் பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரையான ஒரு வார காலம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செங்கோட்டை மூடப்பட்டுள்ளது என்றாா்.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் நோய் கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், தில்லி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Advertisement
தலைநகா் தில்லியில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து தில்லியில் உள்ள முக்கிய சில பூங்காக்களை தற்காலிகமாக மூடி தில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், காஜிப்பூா் கோழி இறைச்சி சந்தையை தற்காலிகமாக மூடி தில்லி அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நூறு கோழிகளிடம் தில்லி அரசு பறவைக் காய்ச்சல் சோதனை நடத்தியது. அதில், இங்கு பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்த சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.