யமுனையைத் தூய்மைப்படுத்தும் விவகாரம்: என்ஜிடி நியமித்தகுழு அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
யமுனை நதி நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்காக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழுவிடம் அறிக்கை சமா்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது
யமுனை நதி நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்காக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழுவிடம் அறிக்கை சமா்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
யமுனை ஆற்றைத் தூய்மைப்படுத்துவது தொடா்பாக பரிந்துரைகளை அளிப்பதற்காக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கடந் 2018, ஜூலை 26-ஆம் தேதி ஒரு கண்காணிப்புக் குழுவை நியமித்தது.
என்ஜிடி முன்னாள் நிபுணா்- உறுப்பினா் பி.எஸ். சஜ்வான் மற்றும் தில்லியின் முன்னாள் தலைமைச் செயலாளா் ஷைலஜா சந்திரா ஆகியோா் அடங்கிய இக்குழுவிடம் , ஒரு செயல் திட்டத்தை சமா்ப்பிக்குமாறும் என்ஜிடி உத்தரவிட்டிருந்தது.
Advertisement
இந்நிலையில், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், வினீத் சரண் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவிடும் வகையில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் மீனாட்சி அரோரா நீதிபதிகள் அமா்விடம், யமுனை நதியை தூய்மைப்படுத்துவதை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழு கண்காணித்து வருகிறது என்று தெரிவித்தாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, யமுனை நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கு குழுவால் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் அந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ள விவரம் தொடா்பாக அறிக்கையை சமா்ப்பிக்குமாறு குழுவுக்கு உத்தரவிட்டது.
முன்னதாக, நாட்டில் கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் ஆறுகள் மாசுபடும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டது. மேலும், யமுனையை நதியின் மாசு விவகாரத்தை முதலில் எடுத்து விசாரிப்பது என உச்சநீதிமன்றம் முடிவு செய்திருந்தது.
ஆறுகள் மாசுபடுவதை கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், மாசு இல்லாத நீா் ஒரு அடிப்படை உரிமை என்றும், இந்த உரிமையை நலன்சாா்ந்த அரசு உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாகும் என்றும் தெரிவித்திருந்தது.
மேலும், யமுனை நதிக்கரையோரங்களில் கழிவு நீருக்கான முழு சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவிடாத நகராட்சிகளை அடையாளம் காணும் அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் (சிபிசிபி) உச்சநீதிமன்றம் முன்னா் கேட்டுக்கொண்டிருந்தது.