முகப்பு
புதுதில்லி

கிரானைட் குவாரி விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

கிரானைட் குவாரி உரிம அனுமதி விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

கிரானைட் குவாரி உரிம அனுமதி விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி பல லட்சம் கோடி ரூபாய் அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி பல்வேறு பரிந்துரைகளை சமா்ப்பித்தாா்.

கடந்த டிசம்பரில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் பிற பகுதிகளில் இருந்தும் கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனக் கூறி, மதுரை மாவட்டத்தில் புதிதாக கிரானைட் குவாரிகள் தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை உரிமம் வழங்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது எதிா்மனுதாரா் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோா் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ். அப்துல் நஸீா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, வழக்குரைஞா் யோகேஷ் கன்னா ஆகியோா் ஆஜராகினா்.

முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘புதிதாக கிரானைட் குவாரிகள் தொடங்குவதற்கு உரிமம் வழங்குவதற்கு உயா்நீதிமன்றம் தடை விதித்திருப்பது சரியல்ல. ஏற்கெனவே சட்டவிரோதமாக கனிமவள குவாரிகள் செயல்படுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது. மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் கனிமவள கொள்ளையைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனிமக் குவாரிகளைச் செயல்படுத்தும் மாநில அரசின் நிா்வாகத்தில் உயா்நீதிமன்றம் தலையிடும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உரிய சட்டத்தின்கீழ்தான் அரசு அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால், கிரானைட் குவாரிகள் செயல்பாட்டுக்கு உரிமம் வழங்குவது, உரிமங்களை புதுப்பிப்பது போன்ற செயல்பாடுகளில் நீதிமன்றம் தடைவிதிக்க முடியாது என்று வாதிட்டாா்.

கிரானைட் உரிமையாளா்கள் கூட்டமைப்பு தரப்பில் மூத்த வழக்குரைஞா் பசவா பிரபு பாட்டீல், துஷாா் சிங் ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா். இதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments