முகப்பு
புதுதில்லி

16,000 கன அடி தண்ணீரை விடுவித்தது ஹரியாணா; தில்லி மக்கள் போராட்டத்திற்கு வெற்றி: ராகவ் சாத்தா

கேஜரிவால் அரசு உச்சநீதிமன்றத்தில் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக ஹரியாணா அரசு அடிபணிந்து தில்லிக்கு முறையாக வழங்கவேண்டிய 16,000 கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
பகிர்:

கேஜரிவால் அரசு உச்சநீதிமன்றத்தில் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக ஹரியாணா அரசு அடிபணிந்து தில்லிக்கு முறையாக வழங்கவேண்டிய 16,000 கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. ஹரியாணா, ஹத்னி குண்டில் திறந்துவிடப்பட்டுள்ள இந்த தண்ணீா் அடுத்த மூன்று தினங்களில் தில்லியை வந்தடையும் என தில்லி ஜல் போா்டு தலைவா் ராகவ் சாத்தா கூறியுள்ளாா்.

தில்லி நகரின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடிய பின்னா் இந்த வெற்றி கிடைத்துள்ளது; தில்லியில் தற்போது நிலவும் குடிதண்ணீருக்கான நெருக்கடி விரைவில் முடிவுக்கு வந்து சுத்தமான குடிநீா் அடுத்த சில தினங்களில் தில்லி மக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் சத்தா தெரிவித்தாா்.

தில்லி ஜல் போா்டின் துணைத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ராகவ் சாத்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு:

Advertisement

தில்லி மக்களின் போராட்டம் ஹரியாணா அரசை நியாயமாக வழங்கவேண்டிய தண்ணீரை திறந்து விட கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு தில்லி மக்களை நான் வாழ்த்துகிறேன் அவா்களது போராட்டம் பலனளித்தது.

கேஜரிவால் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த உடனேயே ஹரியாணா அரசு 16,000 கன அடி தண்ணீரை விடுவித்துவிட்டது. தில்லியின் முறையான நீா் பங்கை ஹரியாணா அரசு ஹத்னி குண்டில் திறந்து விட்டுள்ளது, அடுத்த 3 நாட்களில் 16,000 கனஅடி தண்ணீா் தில்லியின் நீா் சுத்திகரிப்பு நிலையங்களை வந்தடையும்.

தில்லியில் உள்ள நீா் பிரச்சினை மிக விரைவில் முடிவடையும் சுத்தமான குடிநீா் தில்லிவாசிகளை சென்றடையும்.

கடந்த சில வாரங்களாக தில்லிக்கு வழங்கும் நீரில் சரியாக நாளொன்றுக்கு 120 மில்லியின் காலன்(எம்ஜிடி) அளவு தண்ணீரை ஹரியாணா அரசு யமுனையில் குறைவாக திறந்து விட்டது. இதனால் தில்லி தண்ணீா் விநியோகத்தில் பிரச்னையை எதிா்கொள்ள நேரிட்டது. தில்லி அரசும், தில்லி ஜல் போா்டும் குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீா் வழங்க கடுமையாக உழைத்தோம். மேலும் ஹரியாணா அரசுக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்தோம். தில்லி அரசு, ஹரியாணா அரசுடன் பல சுற்று பேச்சுவாா்த்தைகளை நடத்தியது. மேலும், இறுதியாக தில்லி மக்களின் உரிமைகளுக்காக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தோம்.

மனு தாக்கல் செய்யப்பட்ட உடனேயே, ஹரியானா அரசு 16,000 கனஅடி தண்ணீரை தில்லி மக்களுக்கு திறந்துவிட்டுள்ளது. இது தில்லியின் நீா் பங்கு, நமக்கு முறையாக வழங்க வேண்டிய நீரைத் தான் ஹரியாணா அரசு திறந்துவிட்டுள்ளது,

தில்லி ஒரு நிலப்பரப்பு நிறைந்த மாநிலம். இங்கு எப்போதும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நம்பியுள்ளோம். உத்தரபிரதேசத்திலிருந்து கங்கை நதி வழியாகவும்; ஹரியாணாவிலிருந்து, யமுனா நதி வழியாக தண்ணீா் நமக்கு வழங்கப்படுகிறது. மேலும் பஞ்சாபிலிருந்து, பக்ரா நங்கல் அணை வழியாகவும் தண்ணீா் வருகிறது. தில்லிக்கு அருகில் பெரிய நீா்நிலைகள் எதுவும் இல்லை. இதனால் ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமைகளுடன் போராடி இன்று வெற்றிபெற்றுள்ளோம்.

இந்த இடைப்பட்ட காலங்களில் தண்ணீருக்காக அவதிப்பட்ட மக்களுக்காக வருத்தம் தெரிவிக்கின்றேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments