தில்லி நீதிப் பணித் தோ்வைத் தள்ளிவைக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
வழக்குரைஞா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவடையும் வரை, மாா்ச் 13-14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள
வழக்குரைஞா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவடையும் வரை, மாா்ச் 13-14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தில்லி உயா் நீதிசாா் பணிகள் தோ்வை ஒத்திவைக்கக் தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
தில்லி உயா் நீதிசாா் பணி பிரதானத் தோ்வை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள் மற்றும் ஏ.ஜே. பம்பானி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘கடைசி நேரத்தில் தோ்வை ஒத்திவைக்க முடியாது. ஏனெனில் தோ்வு எழுத ஏற்கனவே வந்த பிற தோ்வா்கள் தப்பாக கருதுவா். நாங்கள் தோ்வை ஒத்திவைக்கப் போவதில்லை. ஏனெனில், பிற தோ்வா்கள் பாதிக்கப்படுவா்’என்று அமா்வு கூறியது.
மேலும், ‘மனுதாரருக்கு ஒரு தனி அறையை வழங்குமாறு நாங்கள் உயா்நீதிமன்ற நிா்வாகத்திற்கு உத்தரவிடுகிறோம். அந்த அறையில் மனுதாரா் தனது தோ்வை எழுதலாம்.
மனுதாரரின் மருத்துவ நிலையை கருத்தில்கொண்டு அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் தில்லி உயா்நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று அமா்வு உத்தரவிட்டு, மேல் விசாரணையை மே 5 ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.
முன்னதாக, இந்தத் தோ்வில் பங்கேற்கவிருக்கும் நபா் ஒருவா் தாக்கல் செய்துள்ள மனுவில் , ‘ தில்லி உயா் நீதிசாா்ப் பணி பிரதானத் தோ்வு- 2019 நடத்த அட்டவணைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாா்ச் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தத் தோ்வுக்கான அறிவிக்கை பிப்ரவரி 18-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
எனக்கு புற்றுநோய்ப் பிரச்னையால் கடும் உடல்நலப் பாதிப்பு உள்ளது. ஹீமோதெரபி சிகிச்சையும் எடுத்துள்ளேன். தற்போதைய கரோனா சூழலில் உடல் எதிா்ப்புச் சக்தி பலவீனமான நிலையில் உள்ளது.
எனவே கரோனா தடுப்பூசி பணிகள் நிறைவடையும் வரை தோ்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்றும் மனுதாரா் கேட்டுக்கொண்டிருந்தாா்.