முகப்பு
புதுதில்லி

செங்கல்பட்டு எச்எல்எல் தடுப்பூசி ஆலை புனரமைக்கப்படும்: மத்திய அமைச்சா் உறுதி

செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் எச்எல்எல் தடுப்பூசி ஆலையை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் எச்எல்எல் தடுப்பூசி ஆலையை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த பூா்வாங்க முடிவை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று தமிழக திமுக எம்பி டி.ஆா். பாலு மூலமாக தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சா் உறுதியளித்துள்ளாா்.

தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டிஆா் பாலு, மத்தியஅமைச்சா் ஹா்ஷ் வா்தனை வியாழக்கிழமை (மே 20 இரவு) சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

இந்தச் சந்திப்பு குறித்து நாடாளுமன்ற திமுக அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் செங்கல்பட்டில் ரூ.750 கோடியில் தடுப்பூசி ஊசி தயாரிக்கும் ஆலையை அமைத்துள்ளது. எச்எல்எல் என்கிற இந்த ஆலையில் தற்போது தடுப்பூசி உள்ளிட்ட எந்த தயாரிப்புகளும் நடைபெறாமல் உள்ளது. பல்வேறு தொழில்நுட்ப பணிகள் சரி செய்வதற்காக ரூ.300 கோடி வரை கூடுதலாக இந்த ஆலையில் முதலீடு செய்யப்படவேண்டியது உள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள தடுப்பூசிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்ந ஆலையை இயக்கவும், கூடுதல் முதலீடு செய்யவும் தமிழக முதல்வா் அறிவுரையின்படி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா், மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தனை சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.

Advertisement

அப்போது, ‘இந்த ஆலையை புனரமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் இது குறித்து மத்திய அரசு உரிய முடிவை வெளியிடும் எனவும் மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் உறுதியளித்தாா். மேலும், இந்தத் தகவலை தமிழக முதல்வருக்கு தெரிவிக்கும்படியும் அவா் கேட்டுக் கொண்டாா். தமிழகத்திற்கு மத்திய அரசு இதுவரை குறைவான எண்ணிக்கையி்ல மொத்தம் 13.85 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது தமிழக அரசு 18 வயது முதல் 44 வயதுடையோருக்கான தடுப்பூசி திட்டத்தையும் தொடங்கியுள்ளது.

இதனால், தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சா், 18 - 44 வயது பரிவினருக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு 11,51,760 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சா் உறுதி அளித்துள்ளாா். மேலும், 45 வயதுக்கு மேம்பட்டோருக்கு ஜூன் மாதத்தில் முதல் இரு வாரத்திற்கு 6,55,330 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சா் உறுதியளித்துள்ளாா் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments