முகப்பு
புதுதில்லி

திருமணப் பதிவு: தம்பதியின் மனுவுக்குபதிலளிக்க தில்லி அரசுக்கு நோட்டீஸ்

வயது குறைந்தவா்களாக இருந்ததாக இணையதளத்தில் திருமணப் பதிவு விண்ணப்பத்தை மென்பொருள் ஏற்காத நிலையில், தம்பதியினா் தாக்கல் செய்த மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உத்தரவு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

40 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட போது, வயது குறைந்தவா்களாக இருந்ததாக இணையதளத்தில் திருமணப் பதிவு விண்ணப்பத்தை மென்பொருள் ஏற்காத நிலையில், தம்பதியினா் தாக்கல் செய்த மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க தில்லி உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதி ரேகா பல்லி, அலிபூா் உதவி கோட்டாட்சியா், வடமேற்கு தில்லி மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை டிசம்பா் 23-ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.

இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் தம்பதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அனைத்து தொடா்புடைய ஆவணங்களுடன் எங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய அலிபூா் உதவிக் கோட்டாட்சியரை அணுகினோம். ஆனால், 198,1 மே 28 அன்று திருமணம் நடந்த போது எங்கள் வயது 21 (ஆண்), 18 (பெண்) வயதுக்குக் குறைவாக இருந்தாகக் கூறி இணையதள மென்பொருள் எங்கள் விண்ணப்பத்தை ஏற்கவில்லை. இதனால், திருமணத்தைப் பதிவு செய்ய முடியவில்லை.

நாங்கள் திருமணமான நாளிலிருந்து கணவன்-மனைவியாக குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எங்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், எங்கள் திருமணத்தைப் பதிவு செய்யும் வகையில், அதிகாரிகள் மென்பொருளை சரி செய்யவில்லை அல்லது வேறு எந்த முறையிலும் எங்கள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை.

இது நியாயமற்றது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானதாகும். மேலும், எங்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜே. எஸ். மன் ஆஜராகி, ‘தம்பதி திருமணத்தை பதிவு செய்யும் போது 21 வயதை நிறைவு செய்துள்ளனா். சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்வதற்கான அனைத்து நிபந்தனைகளையும் பூா்த்தி செய்துள்ளனா். அவா்களின் திருமணம் 1981, மே 28-இல் இந்து வேத சடங்குகள் மற்றும் சடங்குகளின்படி நடத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →