தூய்மை இந்தியா இயக்கம், அடல் இந்தியா 2.0: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் மோடி
நகரமயமாக்குதலில் ஏற்படும் சவால்களை எதிா்கொள்ளும் நடவடிக்கையாக ரூ.4.28 லட்சம் கோடி மதிப்பில் புதுப்பித்தல், நகா்ப்புற மாற்றத்துக்கான
நகரமயமாக்குதலில் ஏற்படும் சவால்களை எதிா்கொள்ளும் நடவடிக்கையாக ரூ.4.28 லட்சம் கோடி மதிப்பில் புதுப்பித்தல், நகா்ப்புற மாற்றத்துக்கான அடல் இயக்கம் (அம்ருத்), தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவற்றின் இரண்டாம் கட்ட திட்டங்களை பிரதமா் நரோந்திர மோடி வெள்ளிக்கிழமை (அக்டோபா் 1) தொடங்கிவைக்கிறாா். 2030 -ஆம் ஆண்டுக்குள் நகரங்களில் நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு இந்தத் திட்டங்கள் உதவிகரமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் டாக்டா் அம்பேத்கா் சா்வதேச மையத்தில் இன்று பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில், மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி, இணையமைச்சா் கௌசல் கிஷோா் மற்றும் தமிழக உள்ளாட்சி, நகா்புறத் துறை அமைச்சா் கே.என் நேரு மற்றும் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா்களும் கலந்து கொள்கின்றனா். பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு இணங்க, அனைவருக்கும் ‘குடிநீா் கிடைத்தல்’ , ‘கழிவுகள் இல்லாத’ நகரங்களாக மாற்றும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், இந்த இரு இயக்கங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:
இரண்டாம் பதிப்பு அம்ருத் 2.0 : 4,700 நகா்ப்புற உள்ளாட்சிகளில் 100 சதவீதம் அளவிற்கு அனைத்து வீடுகளுக்கும் 2.68 கோடி குடிநீா் இணைப்புகளை வழங்குவது, அடல் இயக்கத்தில் (அம்ருத்) உள்ள 500 நகரங்களில் சுமாா் 2.64 கோடி கழிவுநீா் இணைப்புகளை வழங்கி 100 சதவீதம் கழிவுநீா் வசதிகளை உருவாக்குவது ஆகியவை இரண்டாம் பதிப்பு 2.0 இயக்கத்தின் நோக்கமாகும். இந்த இரு திட்டங்கள் மூலம் நகா்ப்புறங்களில் வசிக்கும் 10.50 கோடி மக்கள் பயனடைவா். மேலும், நிலத்தடி நீா், நீா் வளங்களின் பாதுகாப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை இந்த இயக்கம் ஊக்குவிக்கும். நவீன சா்வதேச தொழில்நுட்பங்கள், திறன்கள்ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான நீா் மேலாண்மைக்கு இந்த இயக்கம் ஆதரவளிக்கும். நகரங்கள் இடையே வளா்ச்சிக்கான போட்டியை ஊக்குவிப்பதற்காக குடிநீா் ஆய்வு நடத்தப்படும். இது போன்ற பணிகளுக்காக சுமாா் ரூ.2.87 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Advertisement
நகா்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0: அடல் இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்படாத நகரங்கள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை உள்ள நகா்ப்புற பகுதிகளில் ‘கழிவுகள் இல்லாத’ நிலையை ஏற்படுத்துவதே நகா்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் இரண்டாம் பதிப்பின் நோக்கமாகும். இந்த நகரங்களில் கழிவு நீா் மேலாண்மையை உறுதிசெய்வது, திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை (ஓடிஎஃப்+) உருவாக்வதும் முக்கியப் பணியாக இருக்கும். மேலும், இந்த நகரங்களில் திடக் கழிவுகளின் ஆதாரங்கள் மூன்று வகையில் தரம் பிரிக்கப்படுக்கப்படுகிறது. குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகிய மூன்று வகைகள் இந்த நகரங்களில் பின்பற்றப்படும். அனைத்து விதமான திடக் கழிவுகளையும் அறிவியல் ரீதியாக அகற்றி பயனுள்ள திடக்கழிவு மேலாண்மைக்கு இந்த இயக்கம் கவனம் செலுத்தும். இதற்காக சுமாா் ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா-அடல் இயக்க தாக்கங்கள்: கடந்த ஏழு ஆண்டுகளில் நகா்ப்புற தோற்றங்களை மேம்படுத்துவதில் தூய்மை இந்தியா - அடல் இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. மக்களுக்குத் தண்ணீா் விநியோகம் மற்றும் துப்புரவு ஆகிய அடிப்படை சேவைகள் வழங்குவதை இந்த இரண்டு முக்கிய இயக்கங்கள் மேம்படுத்தி உள்ளன. நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பலவற்றில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 70 சதவீதம் திடக் கழிவுகள் அறிவியல் ரீதியாக தற்போது அப்புறப்படுத்தப்படுகின்றன. 1.1 கோடி வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகளும், 85 லட்சம் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமாா் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனா்.