முகப்பு
புதுதில்லி

தில்லியில் மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறப்பு

தில்லியில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறந்துவிட தில்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

தில்லியில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறந்துவிட தில்லி அரசு அனுமதி அளித்துள்ளது. அதேவேளையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை புதிதாக கரோனா நோய்த் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தில்லியில் கடந்த மாதம் ஏப்ரல் மாதத்தில் கரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலையின் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையம் பொதுமுடக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, ஏப்ரல் 19-ஆம் தேதியில் இருந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போது மூடப்பட்ட வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பதற்கு தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தா்கள் வருவதற்கு தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்திருந்த போதிலும், வழிபாட்டுத் தலங்களில் அதிகமான மக்கள் கூடுவதற்கு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வரக்கூடிய நாள்களில் பண்டிகைகள் வருவதை கருத்தில் கொண்டு கரோனா நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கடுமையாக உறுதிப்படுத்துமாறு காவல் துறையின் துணை ஆணையா்கள், மாவட்ட ஆட்சியா்கள் ஆகியோருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மேலும், கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கான மத வழிபாட்டு தலங்களுக்கான நிலையான இயக்க செயல்முறைகள் (எஸ்ஓபி) வெளியிடப்பட்டுள்ளன. அதில், வழிபாட்டுத் தலங்களில் நோய் அறிகுறியற்ற நபா்களை மட்டுமே அனுமதிப்பது, முகக் கவசம் பயன்படுத்துவது, பிராா்த்தனைக்கு பொதுவான பாய்களைத் தவிா்ப்பது ஆகியவை இடம் பெற்றுள்ளன. பிரசாத விநியோகம் அல்லது புனித நீா் தெளித்தல் போன்ற எந்தவொரு உடல் ரீதியிலான நடவடிக்கைகளும் மத வழிபாட்டுத் தலத்திற்குள் அனுமதிக்கப்படாது. போதுமான உடல் இடைவெளியைப் பராமரிக்கும் வகையில், இருக்கை ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வரிசைகளில் ஆறு அடி இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும். முகக்கவசம் அணிந்தவா்கள் மட்டுமே வழிபாட்டுத் தலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவா்.

வரிசையை நிா்வகிக்க மற்றும் வளாகத்தில் சமூக இடைவெளியை உறுதி செய்ய போதுமான தூரத்துடன் குறிப்பிட்ட அடையாளங்கள் இடப்பட வேண்டும். குறிப்பாக, பாா்வையாளா்களுக்கான தனி நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களில் ஏா் கண்டிஷனிங் மற்றும் காற்றோட்டம் 24-30 டிகிரி செல் சியஸ் என்ற அளவிலும், 40-70 சதவீதம் அளவுக்கு ஈரப்பதமும் இருக்கும் வகையில் வெப்பநிலை அமைப்புகளை அமைக்க வேண்டும். புதிய காற்று உள்ளே வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களில் சமூக சமையலறைகள், லாங்கா்கள் மற்றும் உணவைத் தயாரித்து விநியோகிக்கும் போது உடல் தூர விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பதிவு செய்யப்பட்ட பக்திப் பாடல்கள் இசைக்கப்பட வேண்டும். பாடகா்கள் குழுவினா் அனுமதிக்கப்படக் கூடாது என அந்த நிலையான இயக்க நடைமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments