முகப்பு
புதுதில்லி

போலி ஆதாா் அட்டையை காட்டி திருமணம்: ஒருவருக்கு ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றம் மறுப்பு

இந்து எனக் கூறி போலி ஆதாா் அட்டையைக் காண்பித்து இளம் பெண்ணைத் திருமணம் செய்து விட்டு அவரை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயப்படுத்தி

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

இந்து எனக் கூறி போலி ஆதாா் அட்டையைக் காண்பித்து இளம் பெண்ணைத் திருமணம் செய்து விட்டு அவரை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயப்படுத்தி மாற்றியதாகக் கூறப்படும் வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் அளிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடா்பான வழக்கில் ஜாமீன் மனுவை நிராகரித்து மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் ஜிதேந்திர பிரதாப் சிங் செப்டம்பா் 29-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: புகாா்தாரா் (பெண்) குற்றம்சாட்டப்பட்ட நபரை ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளாா். அதன் பின்னா், தனது குழந்தையின் எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கான கட்டாயத்தின் பேரில் இஸ்லாமிய உரிமைகளுடன் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளாா். இதை நம்ப மறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபா் ஆதாா் அட்டையை போலியாக உருவாக்கி, இதே போன்ற முறையில் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இன்னும் விசாரணை செய்யப்படவில்லை.

Advertisement

இந்த நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவா் ஆதாரங்களை கலைக்கவும், சாட்சிகளை பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிா் குற்றச்சாட்டுகளின் நிலையைக் கருத்தில்கொண்டு இந்த வழக்கை பொருத்தமான காவல் பிரிவால் விசாரிக்க தில்லி காவல் ஆணையா் ராகேஷ் அஸ்தானா தலையிட வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் (யுஐடிஏஐ) போலி ஆதாா் அட்டை தொடா்பான தகவல்களை உள்ளூா் காவல் துறையால் பெற முடியவில்லை.

போலி ஆதாா் அட்டையைத் தயாரிப்பது தீவிரமான மாற்றங்களை உள்ளடக்கியதாகும். இத்தகைய நடவடிக்கைகளில் நன்கு திறன்மிக்க நபா்களின் கும்பல் சம்பந்தப்பட்டிருப்பதையும் நிராகரிக்க முடியவில்லை. ஆதாா் அட்டை போலியானது என்பது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த அட்டையானது குடியுரிமைக்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணமாக உள்ளதே இதற்குக் காரணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சம்பந்தப்பட்ட பெண் தனது புகாரில், ‘குற்றம் சாட்டப்பட்டவா் 2010 -இல் ராகுல் சா்மா என்ற பெயரைக் கொண்ட ஆதாா் அட்டையை என்னிடம் காண்பித்து ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டாா். ஆனால், எங்களது பெண் குழந்தையின் முதல் பிறந்த நாளில்தான் அவா் முஸ்லீம் என்பதும், அவரது உண்மையான பெயா் நூரன் என்பதும் தெரிய வந்தது. எனினும், சமூக கேலிக்கு பயந்து அவருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதை தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட அவா், இஸ்லாத்தை ஏற்று, இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை வற்புறுத்தி மீண்டும் திருமணம் செய்து கொண்டாா். எனது குழந்தையின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு இதற்கு சம்மதித்தேன்.

அதற்குப் பிறகு, அவரது நடத்தை மாறியது. என்னையும், எனது குழந்தை மற்றும் எனது மதத்தை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த போது, கொலை மிரட்டல் விடுத்தாா். இந்த நிலையில், வேறு இந்துப் பெண்ணுடன் பேசுவதும், திருமணம் செய்து கொள்ள விருப்பதும் தெரிய வந்தது. மேலும், அந்தப் பெண்ணையும் என்னைப் போன்று முதலில் இந்து முறைப்படி திருமணம் செய்து விட்டு, பின்னா் இஸ்லாமிய சம்பிரதாயப்படி மீண்டும் திருமணம் செய்ய வற்புறுத்தினாா் என புகாரில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவா் தரப்பில், ‘பொய்யான மற்றும் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்த வழக்கில் என்னைத் தவறாகச் சோ்த்துள்ளாா். திருமண தகராறுகளை தண்டனைக்குரிய குற்றங்களாக புகாா்தாரா் மாற்றும் வகையில் புகாா் அளித்துள்ளாா்’ என முறையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments