முகப்பு
புதுதில்லி

காற்று மாசு குறைப்புப் பணிகள்: தில்லிக்கு ரூ.18.74 கோடி பசுமை நிதி

காற்று மாசு குறைப்பதலுக்குரிய முக்கியமான இடைவெளிகளைப் பூா்த்தி செய்த தில்லி அரசின் நடவடிக்கைகளுக்கு தேசிய தூய்மைக் காற்றுத்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

காற்று மாசு குறைப்பதலுக்குரிய முக்கியமான இடைவெளிகளைப் பூா்த்தி செய்த தில்லி அரசின் நடவடிக்கைகளுக்கு தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் கீழ் பசுமை நிதியாக ரூ.18.74 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் கீழ் தில்லி அரசு முதன் முறையாக இந்த நிதியைப் பெற்றுள்ளது.

இந்திய நகரங்களில் உள்ள காற்றின் தரங்களை அறிய தேசிய காற்று கண்காணிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த 2011-2015 காலகட்டங்களில் காற்று மாசு உள்ள நகரங்கள் அடையாளம் காணப்பட்டடன. தேசிய காற்றுத் தரத்தை பூா்த்தி செய்யாத 132 நகரங்களில் தேசிய தூய்மைக் காற்றுத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி 2017 -ஆம் ஆண்டு கிடைக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் இந்த நகரங்களில் 2024-க்குள் பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 மாசு நுண் துகள்களில் முறையே 20 சதவீதம், 30 சதவீதம் வரை காற்று மாசுவை குறைக்க வலியுறுத்தப்பட்டது. இதற்கான பசுமை நிதியும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

இலக்கு: பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 மாசு நுண் துகள்களில் முறையே ஒரு கன மீட்டருக்கு 40 மைக்ரோகிராம், 60 மைக்ரோகிராம் வரை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆண்டு சராசரி தரநிலை அளவாகும். தில்லியில் 2017-ஆம் ஆண்டு அளவீடுகளின்படி ஆண்டு சராசரி பி.எம் 10 மாசு நுண் துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 240 மைக்ரோ கிராமாக இருந்தது. இதை 2024 -ஆம் ஆண்டுக்குள் 168 மைக்ரோ கிராமாக குறைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம் தொடங்கப்பட்டும், இந்தத் திட்டத்தின் கீழ் தேசியத் தலைநகா் தில்லிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த நிதியும் கிடைக்கவில்லை. தில்லியில் நுழையும் 2,000 சிசிக்கு மேல் உள்ள வணிக டீசல் வாகனங்களுக்கு பசுமை மேல்வரி (செஸ் ) போன்றவை மட்டும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் கிடைத்தது.

முதன் முறையாக தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் கீழ் பசுமை நிதியாக ரூ.18.74 கோடியை தில்லி அரசு பெற்றுள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுப்புறச் சூழல் அதிகாரி கூறுகையில், ‘நிதி ஆணையப் பரிந்துரையின்படி, மாசு மேலாண்மைக்கு ஏற்கெனவே 50 நகரங்கள் (2020-21-இல் ரூ. 4,400 மற்றும் 2021-22-இல் ரூ. 2,217 கோடி) நிதியைப் பெற்று வருகின்றன. தற்போது மீதமுள்ள தில்லி உள்ளிட்ட 82 நகரங்களுக்கு தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.290 கோடி பசுமை நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இடைவெளி இருந்தால் மற்ற ஆதாரங்களிலிருந்து நிதி வழங்கப்படும்’என்றாா்.

தில்லி அரசின் நடவடிக்கைகள்: தில்லி அரசு தூசி மாசுக்களை கட்டுப்படுத்த விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும், பயிா்க்கழிவுகள் எரிப்பு, அதிக மாசுக்கள் உள்ள இடங்கள், வாகன மாசுக்கள், தூசி மாசுக்கள் உள்ளிட்ட 10 முக்கியப் பிரச்னைகளில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், 2022, ஜனவரி 1-ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கு தில்லி அரசு முற்றிலும் தடை செய்துள்ளது. பனிப்புகை கோபுரங்கள் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இது தவிர தலைநகரில் காற்று மாசு பிரச்னையைச் சமாளிக்க ‘குளிா்கால செயல் திட்டத்தை’யும் தில்லி அரசு தயாா் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments