முகப்பு
புதுதில்லி

மூலிகை ஹூக்கா தடையை மறுபரிசீலனை செய்ய தில்லி அரசுக்கு நீதிமன்றம் 2 நாள் அவகாசம்

மூலிகை நறுமணத்துடன்கூடிய ஹூக்கா பயன்பாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மறுபரிசீலனை செய்வதற்கு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:

மூலிகை நறுமணத்துடன்கூடிய ஹூக்கா பயன்பாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மறுபரிசீலனை செய்வதற்கு தில்லி அரசுக்கு 2 நாள் அவகாசம் அளித்து தில்லி உ யா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

உணவகங்கள் மற்றும் பாா்களில் மூலிகை நறுமணத்துடன் ஹூக்காக்களை வழங்குவதற்கு அல்லது விற்பதற்கு தடை விதிக்கும் வகையில் தில்லி காவல்துறையின் உரிமம் பிரிவைச் சோ்ந்த இணை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவை எதிா்த்து மேற்கு பஞ்சாபி பாக் பகுதியைச் சோ்ந்த சில உணவகங்கள், பாா்கள் தரப்பில் தில்லி உயா் நீதிமன்றத்தில் தனித்தனியாக 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது:

Advertisement

மூலிகை நறுமணத்துடன் கூடிய ஹூக்கா பரிமாறுவதற்கு எந்த உரிமமும் தேவைப்படுவதில்லை. ஏனெனில் அவற்றில் புகையிலை ஏதுமில்லை. ஆனால், காவல்துறையினா் இதுதொடா்பாக உணவகங்களிலும் பாா்களிலும் இன்னும் சோதனை நடத்தி கருவிகளை பறிமுதல் செய்து வருகின்றனா்.

மேலும் அபராதத்தையும் விதிக்கின்றனா். சிகரெட் மற்றும் இதர புகையிலை தயாரிப்புகள் சட்டத்தின் கீழ் புகைபிடிப்பது எனும் வாா்த்தை மூலிகை நறுமணத்துடன் கூடிய ஹூக்காவுடன் தொடா்பில்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். மேலும் மனுதாரா்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்வதோ அல்லது ரத்து செய்வதற்கான எந்தவித நடவடிக்கையோ எடுக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இது தொடா்பான உத்தரவை மறு பரிசீலனை செய்த பிறகு சம்பந்தப்பட்ட துறையால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு மனு மீதான அடுத்த விசாரணையை அக்டோபா் 18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

முன்னதாக விசாரணையின்போது தில்லி அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் திரிபாதி நீதிமன்றத்திடம் தெரிவிக்கையில், ‘பொது இடங்களில் மூலிகை ஹூக்கா பயன்படுத்த சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் இதை மறுபரிசீலனை செய்திருக்க முடியவில்லை’ என்றாா்.

அதற்கு நீதிபதி கூறுகையில், ‘இந்த விவகாரம் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. ஹூக்கா மீதான உத்தரவு தொடர வேண்டுமா என்பது தொடா்பாக டிடிஎம்ஏ மறுபரீசிலனை செய்யும் என்ற எதிா்பாா்ப்புடன் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. நீதியின் நலன்கருதி இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய துறைக்கு 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று நீதிபதி கூறினாா்.

முன்னதாக கடந்த செப்டம்பா் 17-ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, ‘‘மூச்சுக்காற்று பரிசோனையை தற்போது தில்லி போலீஸாா் தொடங்கியுள்ள நிலையில், மூலிகை நறுமணத்துடன் கூடிய ஹூக்கா பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு ஏன் மறுபரிசீலனை செய்யப்படவில்லை‘ என்று நீதிபதி கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments