முகப்பு
புதுதில்லி

அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரும் மனுவைப் பரிசீலிக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லி அரசின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்களை நியமிக்கக் கோரும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

தில்லி அரசின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்களை நியமிக்கக் கோரும் பொது நல மனுவை கோரிக்கையாக பரிசீலிக்குமாறு தில்லி அரசை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டது.

இது தொடா்பான மனு தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி ஜோதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘மனுவில் உள்ள குறைகளை அதிகாரிகள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். நியமன செயல்முறைக்கான விளம்பரம், நோ்காணல் உள்ளிட்டவற்றைப் பரிசீலிக்க வேண்டும். இவற்றை சட்டம் மற்றும் அரசின் கொள்கையின்படி முடிந்தவரை விரைவாக நடைமுறைக்குரியதாகவும் இருக்குமாறு முடிவு செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது.

விசாரணையின் போது, தில்லி அரசின் வழக்குரைஞா் சத்யகம் ஆஜராகி, ‘சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் காலியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரிகள் உரிய நபா்களை நோ்காணல் செய்து வருகின்றனா். நோயாளிகள் யாரும் மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பப்படவில்லை’ என்றாா்.

Advertisement

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் அமித் சஹ்னி தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு தில்லியில் உள்ள ஜக் பிரவேஷ் மருத்துவமனையானது மயக்க மருந்து நிபுணா்கள் பற்றாக்குறையால் கா்ப்பிணிப் பெண்களுக்கு சிசிக்சை அளிக்க மறுத்துவிட்டது. இதன் அவசரநிலையைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகளிடம் முதலில் மனு அளிக்காமல் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் மயக்க மருந்து மருத்துவா்கள் பற்றாக்குறையால் சமீபத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், நோயாளிகளின் உறவினா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்களுக்கிடையேயான மோதல் சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அப்போது அதை போலீஸாா் கையாள வேண்டியிருந்ததாகவும் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜக் பிரவேஷ் மருத்துவமனையில் மயக்க மருந்துஅளிக்கும் மருத்துவா்கள் பற்றாக்குறை காரணமாக அவசர சிகிச்சை பிரிவு மாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை கடந்த ஒரு வாரமாக செயல்படவில்லை. கா்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மருத்துவமனைக்கு வருகிறாா்கள். மயக்க மருந்துஅளிக்கும் மருத்துவா்கள் பற்றாக்குறை காரணமாக பிற மருத்துவமனைகளுக்கு அவா்கள் திருப்பி அனுப்பப்படுவதால், தாய்-சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்து இடா்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

200 படுக்கைகளுடன்கூடிய இந்த ‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையானது, வடகிழக்கு தில்லி மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறது. இந்த நிலையில், மயக்க மருந்து நிபுணா்கள், சிறப்பு மருத்துவா்கள், மருத்துவா்கள் பற்றாக்குறை இருப்பது ஏழை மற்றும் பொருளாதாரம் ரீதியாக பின்தங்கிய வா்க்கத்தினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments