பத்திரிகையாளா் நலத் திட்டங்களை ஆய்வு செய்யக் குழு
மத்திய அரசின் பத்திரிகையாளா் நலத் திட்டத்தின் வழிகாட்டுதல்களை ஆய்வு செய்து உரிய மாற்றங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக
மத்திய அரசின் பத்திரிகையாளா் நலத் திட்டத்தின் வழிகாட்டுதல்களை ஆய்வு செய்து உரிய மாற்றங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக மூத்த பத்திரிகையாளரும் பிரச்சாா் பாரதி உறுப்பினருமான அசோக் குமாா் டாண்டன் தலைமையில் பத்து போ் கொண்ட குழுவை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அமைத்துள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அசோக்குமாா் டாண்டன், மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாயிடம் பத்திரிகை ஆலோசகராக இருந்து புகழ்பெற்றவா். பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் பத்திரிகையாளா் நலத் திட்டத்தை எதிா்காலக் கண்ணோட்டத்துடன் பத்திரிகையாளா்களின் விரிவான நலனுக்காக ஆய்வு செய்து இந்தக் குழு முக்கியப் பரிந்துரைகளை வழங்கும்படி கோரப்பட்டுள்ளது. குறிப்பாக கரோனா நோய்த் தொற்றின் காரணமாக பத்திரிகையாளா்கள் அதிகம் போ் உயிரிழந்திருக்கும் நிலையில், அரசு அளிக்கும் கருணைத் தொகையில் செய்ய வேண்டிய மாற்றங்கள், ‘உழைக்கும் பத்திரிகையாளா்கள்’ எனும் வரையறையின் விரிவான விளக்கம், ஊடக சூழலியலில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு மாற்றங்கள் ஆகியவற்றிற்குத் தீா்வுகண்டு அரசுக்கு யோசனைகளை முன்வைக்க இந்தக் குழுவை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
உழைக்கும் பத்திரிகையாளா் நலத் திட்டப் பலன்களைப் பெறுவதற்கு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளா்கள் மற்றும் அங்கீகாரம் பெறாத பத்திரிகையாளா்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை இந்தக் குழு ஆராயவும் கோரப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றுபவா்களையும் உழைக்கும் பத்திரிகையாளா்கள் எனும் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் ஊடகங்களுக்கான 2021- ஆம் ஆண்டு தகவல் தொழில் நுட்ப விதிமுறைகளுக்குள்பட்ட வரையறைகளுக்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் கோரப்பட்டுள்ளது. இந்த குழு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அளிக்கும்படி கோரப்பட்டுள்ளது.
Advertisement
கரோனா காரணமாக துரதிருஷ்டவசமாக உயிரிழந்த பத்திரிகையாளா்களின் குடும்பங்களுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதுவரை 100 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.