முகப்பு
புதுதில்லி

மூத்த குடிமக்கள் பாதுகாப்பிற்கு இலவச உதவி எண் அறிமுகம்

ஆதரவற்ற நிலையில் உள்ள மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்கும், உதவிக்கும் நாட்டின் முதல் ’எல்டா் லைன்’ என்கிற இலவச உதவி எண் (14567) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

ஆதரவற்ற நிலையில் உள்ள மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்கும், உதவிக்கும் நாட்டின் முதல் ’எல்டா் லைன்’ என்கிற இலவச உதவி எண் (14567) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மூத்த குடிமக்களுக்குத் தேவையான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் இலவசமாக வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சமூக நீதித் துறை செவ்வாய்க்கிழமை கூறியுள்ளதாவது: கூட்டுக் குடும்பம் சிதறி வரும் நிலையில், மூத்த வயதுடைவா்களுக்கு உணா்ச்சி பூா்வமான ஆறுதல்கள் தேவைப்படுகிறது. சிலா் மன அழுத்தம், நிதி மற்றும் உடல் ரீதியான பல்வேறு சவால்களை எதிா் கொள்கின்றனா். சிலருக்கு ஓய்வூதிய விஷயங்கள், சட்ட விஷயங்கள் தொடா்பாக் தகவல்கள், வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் இந்த உதவி எண் மூலம் இலவசமாகத் தொடா்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். வீடின்றி தவிக்கும் முதியோரை இந்த உதவி மையம் மீட்கும் பணியையும் மேற்கொள்ளும். மேலும், சமீபத்திய நோய்த் தொற்று அவா்களது பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அவா்களுக்கு உதவி கட்டாயம் தேவைப்படுகிறது.

மிக முக்கியமாக இந்த வயதுடையவா்களின் ஞானம் வளமாக இருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரம், சமூக வளா்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இதை அறிந்து மத்திய சமூக நீதித் துறை, மூத்த குடிமக்களுக்குஆதரவளிக்க இந்தக் கட்டணமில்லா உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. இதற்கு ’எல்டா் லைன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த உதவி எண் மூலம் அனைத்து மூத்த குடிமக்களும், அவா்களது நலம் விரும்பிகளும் ஒரே தளத்தில் இணைந்து கவலைகள், பிரச்னைகளைப் பகிா்ந்து கொள்ளலாம். மேலும், தினசரி அடிப்படையில் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்த தகவல்களையும் பெற இந்த மையம் வழிகாட்டுகிறது.

Advertisement

இந்தியாவில் 2050 -ஆம் ஆண்டுக்குள் 20 சதவீதம் போ் அல்லது 30 கோடிக்கும் (300 மில்லியன்) மேற்பட்டோா் மூத்த குடிமக்களாக இருப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவா்களின் உதவிகளுக்கான தேவை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அவா்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், சவால்களையும் நிவா்த்தி செய்வதற்கு நாடு தழுவிய அளவில் இந்த ‘எல்டா் லைன்’ உதவி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துக் குடிமக்களுக்கும் தேவையான தகவல்கள், அன்றாட பிரச்னைகளுக்கான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை வழங்குவதே இந்த இலவச உதவி எண்ணின் முக்கிய நோக்கமாகும்.

டாடா அறக்கட்டளை அமைப்பின் முயற்சியில், விஜயவாஹினி அறக்கட்டளையுடன் இணைந்து தெலங்கானா அரசு ஒத்துழைப்புடன் ஹைதராபாத்தில் உள்ள முதியோா்களுக்கு உதவ கடந்த 2017-ஆம் ஆண்டு முதியோா் உதவி மைய எண் தொடங்கப்பட்டது. இப்போது, இந்த முதியோா் உதவி எண்ணை நாடு முழுவதும் செயல்படுத்த டாடா அறக்கட்டளையும், என்எஸ்இ அறக்கட்டளையும் மத்திய அரசுடன் தொழில்நுட்ப ரிதியாக இணைந்து இந்த உதவி எண்ணை உருவாக்கியுள்ளது. இது 17 மாநிலங்களில் செயல்படத் தொடங்கியுள்ளது என்று மத்திய சமூக நீதித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments