உயிருக்கு அச்சுறுத்தல் விவகாரம்: சுவாமி சக்கரபாணியின் பாதுகாப்பை மதிப்பிட மத்திய அரசு, தில்லி காவல் துறைக்கு உத்தரவு
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மூலம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்துள்ள அகில பாரத மகாசபைத் தலைவா் சுவாமி சக்கரபாணிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை மதிப்பீடு
புது தில்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மூலம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்துள்ள அகில பாரத மகாசபைத் தலைவா் சுவாமி சக்கரபாணிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை மதிப்பீடு செய்யுமாறு மத்திய அரசுக்கும், தில்லி காவல் துறைக்கும் உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான மனு உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது மத்திய உள்துறை அமைச்சகம், தில்லி காவல் துறை ஆகியவை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை அக்டோபா் 5-ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.
வழக்கு விசாரணையின் போது சுவாமி சக்கரபாணியின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங் ஆஜராகி, ‘சுவாமி சக்கரபாணிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ‘எக்ஸ்’ பாதுகாப்பு பிரிவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு ஒரே ஒரு பாதுகாவலா் வசதி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு மனுதாரருக்கு போதுமானதாக இல்லை. அவருடைய உயிருக்கு மோசமான அச்சுறுத்தல் உள்ளது. அவரது உயிருக்கு தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் மற்றும் சமூக விரோத சக்திகளிடமிருந்து ஆபத்து உள்ளது. இதனால், அவருக்கு மீண்டும் இசட் பாதுகாப்பு வசதியை அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.
Advertisement
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தரப்பில் வழக்குரைஞா் அஜய் திக்பால், தில்லி காவல் துறையின் தரப்பில் கூடுதல் வழக்குரைஞா் அனுஜ் அகா்வால் ஆகியோா் ஆஜராகினா்.
மத்திய அரசு வழக்குரைஞா் அஜித் திக்பால், ‘காவல் துறையின் மூலம் நடத்தப்படும் மதிப்பீட்டின் அடிப்படையில்தான் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது’ என்றாா்.
சந்த் மகாசபையின் தேசியத் தலைவரும் அகில பாரத மகாசபையின் தலைவருமான சுவாமி சக்கரபாணி தரப்பில் வழக்குரைஞா் ராஜேஸ் ரெய்னா மூலம் தில்லி உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சுவாமி சக்கரபாணிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வளையம் தன்னிச்சையாகவும் நியாயமற்ற முறையிலும்
குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கோரிக்கை மனு அளித்த பிறகும் ‘இசட்’ பாதுகாப்பு வசதியைத் தொடா்ந்து பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினா் தவறிவிட்டனா். மனுதாரருக்கு பாதுகாப்பு வசதியை திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் அவரது உயிருக்கு பயங்கரவாதிகளின் மூலம் அச்சுறுத்தல் உள்ளது. மேலும், பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா ஷகீல் தரப்பில் அவரை சுட்டுக் கொல்லவும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இந்த நிலையில், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பை வழங்காமல் இருப்பது, அவரது அரசமைப்பு சட்ட உரிமையை மீறுவதாகவும் உள்ளது’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.