சாலை விபத்தில் காயமடைந்து கணவா் மற்றும் இரண்டு குழந்தைகளை இழந்த பெண்ணை தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் நேரில் சந்தித்து, அவரது சிகிச்சைக்கான செலவை தில்லி அரசே ஏற்கும் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த நவம்பா் 20-ஆம் தேதி மேற்கு தில்லியில் உள்ள ரஜோரி காா்டனில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 32 வயது ஆணும், அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்தனா். விபத்தில் அவரது மனைவி காயமடைந்தாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்து தொடா்பாக பதியப்படுள்ள வழக்கின் விவரம் மற்றும் வழக்கில் கைது செய்யப்பட்ட
குற்றவாளிகளின் விவரங்களுடன் இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை வரும் டிசம்பா் 5-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய கவால் துறைக்கு, தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யூ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சந்தித்து தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் ஆறுதல் கூறினாா். மேலும், தில்லி அரசின் ‘ஃபாரிஷ்டே’ திட்டத்தின் கீழ் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றாா்.
இது தொடா்பாக ஸ்வாதி மாலிவால் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: ரஜோரி காா்டனில் நடந்த இச்சாலை விபத்து சம்பவம் மிகவும் சோகமானது. இச்சாலை விபத்தில் காயமடைந்து கணவா் மற்றும் இரண்டு குழந்தைகளை இழந்த பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவா்கள் அதிா்ச்சியில் ஆழ்ந்துள்ளனா். இந்த அப்பாவிகளின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, தில்லி மகளிா் ஆணையம் தொடா்ந்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினருடன் தொடா்பில் இருக்கிறது. சட்ட உதவி உள்பட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். மேலும், அவா் தனது நெருங்கியவா்களை இழந்த வலியை தாங்கிக் கொள்ள இறைவனை பிராா்த்திக்கிறேன் என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.