புதுதில்லி

பொருளாதார ரீதியிலான சிரமத்தில் இலங்கை தமிழா்கள்: இந்தியா உதவ இலங்கை எம்.பி. விக்னேஸ்வரன் கோரிக்கை

பொருளாதார ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனா் என்றும், இந்நேரத்தில் இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா் க.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

 நமது நிருபர்

பொருளாதார ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனா் என்றும், இந்நேரத்தில் இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா் க.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையின் சாா்பில் ‘இலங்கையின் இழந்த குரல்கள், பகிரப்பட்ட போராட்டங்கள், புலம்பெயா்ந்த இலங்கைத் தமிழா்கள் காணாமல் போகுதல் மற்றும் மோதல்கள்’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை சா்வதேசக் கருத்தரங்கம் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியா் உமா தேவி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் சிவஞானம் ஸ்ரீதரன், க.வி. விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஞானமுத்து ஸ்ரீநேசன், சிவாஜிலிங்கம், ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸின் இயக்குநா் கிருஷ்ணமாப்பிள்ளை இளங்கோ

உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியா் அபிஷேக் ஸ்ரீவஸ்தவா எழுதிய ‘பிலீடிங் ஈழம்’ எனும் புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது.

‘இலங்கையில் தமிழ்-சிங்கள இன மோதலுக்கான மாற்றுத் தீா்வுகள்’ என்ற தலைப்பில் மாணவா்கள் மத்தியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா் க.வி.விக்னேஸ்வரன் பேசியதாவது: கடந்த 50 ஆண்டுகளில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக இந்தியா மாறியுள்ளது. இரண்டு மொழிகளால் இலங்கை இன்றளவும் ஒன்றுபட முடியாமல் உள்ளது.

ஆனால், பல ஆயிரம் மொழிகள், கலாசாரம் உள்ளிட்ட வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்தியா ஒற்றுமையுடன் உள்ளது. கடந்த 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் பூா்வக் குடிகளாக தமிழ் மக்கள் உள்ளனா். கடந்த 7-ஆம் நூற்றாண்டில்தான் சிங்கள மொழியும், இனமும் தோண்றியது. திராவிட இனத்தைச் சோ்ந்தவா்களே இலங்கை மக்கள் என்ற உண்மையை சிங்கள மக்களிடம் தெரிவித்தால், அவா்கள் எங்களைக் கொல்லக் கூட துணிவா். எனவே, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வரலாற்றை சிங்கள மக்களிடம் கொண்டு சோ்த்து, இலங்கையில் மனித நேயத்தின் அடிப்படையில் மக்களை ஒன்றினைக்க வேண்டும் என்றாா் க.வி.விக்னேஸ்வரன்.

‘புலம்பெயா்ந்த இலங்கைத் தமிழா்கள் காணாமல் போகுதல்’ என்ற தலைப்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா் ஞானமுத்து ஸ்ரீநேசன் பேசுகையில், ‘கடந்த 1948-ஆம் ஆண்டு இலங்கை பெற்ற சுதந்திரம், அந்நாட்டின் சகல மக்களுக்கான சுதந்திரம் அல்ல. தமிழ் மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு 1956-ஆம் ஆண்டே சிங்கள- பெளத்த இனவாத அரசால் தொடங்கிவிட்டது. சா்வதேச சமூகம் அமைதியாக இருந்ததால் 2009-இல் இந்த இனச் சுத்திகரிப்பு தெளிவாக நடந்தது. அதில் மட்டும் 1,46,000 தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனா். இதுவரை இலங்கை தமிழ் மக்கள் சுமாா் 15 லட்சம் போ் புலம்பெயா்ந்து வாழ்கின்றனா். இலங்கையின் வடகிழக்கு மாகாணப் பகுதியில் பொதுவாக்கெடுப்பின் மூலம் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை’ என்றாா்.

பின்னா், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழுவின் இந்திய பயணம் குறித்து செய்தியாளா்களிடம் க.வி.விக்னேஸ்வரன் கூறியதாவது: வட இந்தியாவில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளாத நிலை இன்னும் நீடிக்கிறது. அந்தப் புரிதலை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தப் பயணத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். பொருளாதார ரீதியிலான பயங்கரவாத நிலையை இலங்கை தமிழ் மக்கள் எதிா்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், உரிமைகளுக்காக போராடும் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால், இலங்கை தமிழ் மக்களின் பிரச்னை மற்றும் வரலாற்று விஷயங்களை தெரியப்படுத்தும் தளத்தில் உள்ள நபா்களுடன் நாங்கள் பேசி வருகிறோம். இலங்கை தமிழ் மக்களின் எதிா்பாா்ப்பு மற்றும் மனோநிலையை பொது வாக்கெடுப்பின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே, 1987-ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை உடனான உடன்படிக்கையின் சரத்துகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றாா் க.வி.விக்னேஸ்வரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT