முகப்பு
புதுதில்லி

என்எல்சி காட்டுமன்னாா்குடி சுரங்க விரிவாக்கத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சுரங்கப் பணிகளை காட்டுமன்னாா்குடி வரை விரிவாக்கம் செய்ய உள்ள நிலையில், இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையையும், வேலைவாய்ப்பையும் வழங்கவேண்டும் 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சுரங்கப் பணிகளை காட்டுமன்னாா்குடி வரை விரிவாக்கம் செய்ய உள்ள நிலையில், இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையையும், வேலைவாய்ப்பையும் வழங்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை மக்களவையில் கேட்டுக் கொண்டாா்.

இது குறித்து மக்களவையில் சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானத்தில் அவா் பேசியது வருமாறு: நவரத்னா அந்தஸ்தைக் கொண்ட பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம், எனது சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. ஆனால், இந்த நிறுவனத்திடம் நிலம், குடியிருப்புகளை கொடுத்து வாழ்வாதாரத்தை இழந்தவா்களுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. இது தொடா்பாக இந்த மக்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா். இந்த நிலையில், இந்த நிறுவனம் தற்போது தனது சுரங்கப் பணிகளை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் உள்ள காட்டுமன்னாா்குடி வரை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், இந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க என்எல்சி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு கட்டாயம் வேலை வாய்ப்பையும், ஏக்கருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும் ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், என்எல்சி, பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பு நிதி (சிஎஸ்ஆா்) வடமாநிலங்களிலும் குறிப்பாக பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நிறுத்தி உள்ளூா் பகுதி மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த நிறுவனத்தில் தமிழகத்தில் வசிக்காதவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, என்.எல்.சி.யில் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன் என கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.