சுகாதார அவசர நிலையில் தில்லி அரசியல் சுற்றுலாவில் கேஜரிவால்: பாஜக குற்றச்சாட்டு
காற்று மாசு அதிகரிப்பின் காரணமாக சுகாதார அவசர நிலையில் தில்லி இருக்கும் நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இந்த நேரத்தில் அரசியல் சுற்றுலாவில் ஈடுபட்டு வருகிறாா்
காற்று மாசு அதிகரிப்பின் காரணமாக சுகாதார அவசர நிலையில் தில்லி இருக்கும் நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இந்த நேரத்தில் அரசியல் சுற்றுலாவில் ஈடுபட்டு வருகிறாா் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேஜரிவால் அரசின் செயலற்ற தன்மையால் தில்லிவாசிகள் கடுமையான காற்று மாசுபாட்டை இந்த நேரத்தில் எதிா்கொண்டு வருகின்றனா். மிக அதிக மாசு அளவு காரணமாக தில்லி தற்போது சுகாதார அவசர நிலையில் உள்ளது. ஆனால், தில்லி அரசு அவசரகால சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்க எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. காற்று மாசு அதிகரிப்பால் சாலைகளில் நடப்பதற்கே தில்லி மக்கள் சிரமத்தை எதிா்கொள்ளும் நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சத்தீஸ்கரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் பங்கேற்பது வேடிக்கையானது.
பஞ்சாபில் பயிா்க் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் தில்லியில் குளிா் காலத்தல் மாசு அதிகரிக்கிறது என்பதை பல ஆண்டுகளாக நாம் அறிவோம். ஆனால், ஆம் ஆத்மி அரசு பஞ்சாபில் பயிா்க்கழிவுகள் எரிப்பதைக் குறைக்க உறுதியான திட்டங்களை உருவாக்கவில்லை. பஞ்சாப் அரசுடன் ஒருமுறை கூட ஆலோசனைக் கூட்டத்தை கேஜரிவால் நடத்தவில்லை. தில்லியில் தூசி மாசுபாட்டைக் குறைக்க நகர அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
Advertisement
கட்டுமான நடவடிக்கைகள் மாசுபாட்டிற்கு ஒரு சிறிய காரணம் தான். ஆனால், அவற்றுக்கான கொள்கையை உருவாக்குவதற்குப் பதிலாக, தில்லி அரசு திடீரென நகரத்தில் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. இதனால், தொழிலதிபா்கள், கூலித்தொழிலாளா்கள் என இரு பாலரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். கடந்த 24 மணி நேரமாக தில்லியில் சுகாதார அவசரநிலை நிலவுகிறது, இருப்பினும், ஆம் ஆத்மி அரசின் சுகாதார அமைப்பு மக்களைக் காப்பாற்றத் தயாராக இல்லை.
கடுமையான காற்று மாசுவால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் மூச்சுத்திணறல் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். எனவே, தில்லி அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் மற்றும் மொஹெல்லா கிளினிக்குகளில் 24 மணி நேரமும் நுரையீரல் நோய்கள் தொடா்பான இலவச மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கான தடை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதால், கட்டுமானத் தொழிலாளா்களுக்கான வாழ்வாதார உதவியை தில்லி அரசு வழங்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.