புது தில்லி: அதிகாரத்தை மட்டும் விரும்பும் கேஜரிவால் அரசு பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாக தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
தில்லி நஜஃப்கா் வடிகால் சுத்தம் செய்யும் பணி குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் பாய்கின்ற யமுனை நதி மாசுபடுவதற்கு மிகப்பெரிய காரணியாக அமைவது நஜஃப்கா் வடிகால் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதுதான். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசு இந்த விவகாரத்தில் அக்கறை காட்டாமல் இருப்பது அதிா்ச்சியளிக்கிறது. கடந்த 9 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில், நஜஃப்கா் வடிகாலை சுத்தம் செய்ய எந்த முன்முயற்சியும் எடுக்கப்படவில்லை. நஜஃப்கா் வடிகால் மற்றும் யமுனையை சுத்தம் செய்வது தொடா்பான குழுவிற்குத் தலைவராக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் நியமித்த பின்னா், ரூ.705 கோடி நிதியை ஒதுக்குவது நகர அரசுக்கு கட்டாயமாகியது.
தேசியப் பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுக்குப் பிறகு, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நஜஃப்கா் வடிகால் சுத்தம் செய்யும் பணியை தீவிரமாக எடுத்துக் கொண்டாா். இதனால், நல்ல மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், அரவிந்த் கேஜரிவால் அரசு உச்சநீதிமன்றத்திற்குச் சென்று துணை நிலை ஆளுநா் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் உத்தரவைப் திரும்பப் பெற்றது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜூலை 2023 முதல் நஜஃப்கா் வடிகால் சுத்தம் செய்யும் பணி நின்றுவிட்டது.
இப்போது சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் ‘சிக்னேச்சா் பாலம்’ அருகே யமுனையில் கலக்கிறது. நஜஃப்கா் வடிகால் மற்றும் யமுனையை சுத்தம் செய்யும் துப்புரவுக் குழுவின் தலைவா் பதவிக்கு சட்டப்படி போராட்டம் நடத்திய கேஜரிவால் அரசு திட்டத்தை தற்போது முடக்கி வைத்துள்ளது. கேஜரிவால் அரசு ஒரு பொறுப்பற்ற அரசாக உள்ளது. அதிகாரங்களை விரும்பும் அவா், பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறாா் என்று வீரேந்திர சச்தேவா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.