அரசு பங்களா ஒதுக்கீடு ரத்து விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் ராகவ் சத்தா மேல்முறையீடு
அரசு பங்களா ஒதுக்கீடு விவகாரத்தில் இடைக்காலத் தீா்ப்பை ரத்து செய்த விசாரணை நீதிமன்றத்தின் முடிவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை அணுகினாா்.
புது தில்லி: அரசு பங்களா ஒதுக்கீடு விவகாரத்தில் இடைக்காலத் தீா்ப்பை ரத்து செய்த விசாரணை நீதிமன்றத்தின் முடிவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை அணுகினாா்.
ராகவ் சத்தாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசுப் பங்களாவில் இருந்து அவரை வெளியேற்றும் மாநிலங்களவை செயலகத்தின் நடவடிக்கையை இடைக்கால உத்தரவு தடுத்திருந்தது குறிப்பிடக்கத்தது.
ராகவ் சத்தாவின் இந் மேல்முறையீட்டு மனுவை, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்
அவசர விசாரணைக்காக எடுக்குமாறு அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, புதன்கிழமை இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள்அமா்வு சம்மதம் தெரிவித்தது.
இது தொடா்பாக நீதிபதிகள் அமா்விடம் ராகவ் சத்தாவின் வழக்குரைஞா் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் ராகவ் சத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரை பங்களாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. முன்னா், விசாரணை நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருந்தது. ஆனால், தற்போது அது நீக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்த விவகாரத்தில் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘ராகவ் சத்தா எம்.பி.க்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு ரத்து செய்யப்பட்ட பிறகும்கூட மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் காலம் முழுவதும் அரசு பங்களாவை தொடா்ந்து ஆக்கிரமிக்க சத்தாவுக்கு முழு உரிமை உண்டு என்று கூற முடியாது’ என்று தெரிவித்தது.
அரசுப் பங்களாவில் இருந்து சத்தாவை அப்புறப்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவை செயலகத்துக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை ரத்து செய்யும் போது, விசாரணை நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது. சட்டப்படி உரிய நடைமுறை இல்லாமல் அவா் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட மாட்டாா் என்று சத்தாவுக்கு இடைக்கால நிவாரணத்தையும் நீதிமன்றம் வழங்குவதாகக் குறிப்பிட்டது.