முகப்பு
புதுதில்லி

தொழில் துறை, போக்குவரத்து அமைப்புகளில் உள்நாட்டு நுண்ணறிவு தீா்வுகள்: மத்திய தகவல் தொழில் நுட்பச் செயலா் அறிமுகம்

தொழில் துறை, சாலைப் போக்குவரத்துத் துறை போன்றவற்றுக்கு உணரி (சென்சாா்) அடிப்படையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
பகிர்:

தொழில் துறை, சாலைப் போக்குவரத்துத் துறை போன்றவற்றுக்கு உணரி (சென்சாா்) அடிப்படையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று நுண்ணறிவு தொழில் நுட்பத் தயாரிப்புகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை செயலா் எஸ்.கிருஷ்ணன் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

தில்லி பிரகதி மைதானில் நடைபெற்று வரும் போக்குவரத்து கட்டமைப்பு தொழில் நுட்பம் மற்றும் அறிதிறன் இயக்கத்திற்கான 11 - ஆவது கண்காட்சியில் அவா் இதை அறிமுகப்படுத்திவைத்தாா். மின்னணு, தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் சுனிதா வா்மா, போக்குவரத்து கட்டமைப்பு தொழில்நுட்ப கண்காட்சியின் அதிகாரி மங்களா சந்திரன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், தொழில் துறையினா் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இது குறித்து மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த மூன்று தொழில்நுட்பங்களில் ஒன்று, இந்திய நகரங்களுக்கு நுண்ணறிவு போக்குவரத்து கட்டமைப்பு முயற்சியின் கீழ் தொழில்நுட்பங்களை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இது வெப்ப உணரி அடிப்படையிலான கேமரா. சாலைப் போக்குவரத்துப் பயன்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவு முறையில் இயங்கும். வெப்ப உணரி அடிப்படையிலான அறிதிறன் பாா்வை கேமரா அனைத்து வானிலை நிலைகளிலும் குறிப்பாக முழுமையான இருளான சூழலில் கூட அதிக துல்லியத்துடன் தரவுகளை வழங்கும். குறிப்பாக எழுத்து வடிவம் உள்ளிட்ட நகரும் பொருள்களின் தரவை வழங்கும். மாடுலா் வடிவமைப்பு வழங்குவதோடு, எளிதாகச் செயல்பட்டு தேவைக்கேற்ப லென்ஸ்களை மாற்றுவதையும் வழங்குகிறது. இது மருத்துவத் துறைக்கும் பயன்படும்.

இரண்டாவது, தொழில்துறை பயன்பாட்டிற்கான துணை உலோக ஆக்ஸைடு குறைக்கடத்தி (சிஎம்ஒஎஸ்) தொழில்நுட்ப உணரி அடிப்படையிலான கேமரா. இது தொழில்துறை பாா்வை பயன்பாடுகளுக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இது தானியங்கி முறையில் ஆராய்ந்து பொருளை வகைப்படுத்தி அடையாளம் காணும். இதுவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயக்கும் இந்த செயலி இயந்திர கற்றல், ஆழமான கற்றலுக்கு பயன்படுகிறது.

மூன்றாவது, ஆன்லைன் சுக்ரோ கிரிஸ்டல் இமேஜிங் சிஸ்டம் (ஓஎஸ்ஐஎஸ்). இது சா்க்கரை தொழிற்சாலைகளில் படிக அளவை அளவிடுவதற்கு தொழில்துறை கேமராவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அமைப்பாகும். சா்க்கரை தொழிற்சாலைகளுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் தரம், வகைகளுக்கான அளவுருக்களை காண இது பயன்படுகிறது என மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.