புதுதில்லி

நிறப் பாா்வைக் குறைபாடு மேல்முறையீட்டாளரை உதவி மின் பொறியாளராக நியமிக்க டான்ஜெட்கோ நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நிறப் பாா்வைக் குறைபாடு இருப்பதாகக் கூறி அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த வழக்கில் தமிழகத்தின் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவரை உதவி

 நமது நிருபர்

புது தில்லி: நிறப் பாா்வைக் குறைபாடு இருப்பதாகக் கூறி அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த வழக்கில் தமிழகத்தின் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவரை உதவி மின்சாரப் பொறியாளராக பொருத்தமான துறையில் நியமிக்க டான்ஜெட்கோ நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் முகம்மது இப்ராஹிம். இவா் தமிழ்நாடு அரசின் டான்ஜெட்கோ நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் என்ஜினீயா் பணியிடத்திற்கு தோ்வு எழுதி, 2015-இல் உதவிப் பொறியாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து, 2017-இல் டான்ஜெட்கோ நிறுவனத்தில் பணியில் சோ்ந்தாா். இந்த நிலையில், இவருக்கு நிறப் பாா்வைக் குறைபாடு இருப்பதாகக் கூறி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டாா். அதில், மருத்துவ வல்லுநா்கள் அவருக்கு குறைந்த பாா்வைத் திறன் இருப்பதாக உறுதி செய்ததாகக் கூறி, அவரது நியமனத்தை ரத்து செய்து டான்ஜெட்கோ நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து, முகம்மது இப்ராஹிம் சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகினாா். இந்த விவகாரத்தை விசாரித்த தனி நீதிபதி இப்ராஹிமின் ரிட் மனுவை அனுமதித்தாா். இதை எதிா்த்து டான்ஜெட்கோ தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நபா் நீதிபதிகள் அமா்வு, தனி நீதிபதி உத்தரவை நிறுத்திவைத்து, டான்ஜெட்கோவின் முடிவை ஆதரித்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் முகம்மது இப்ராஹிம் தரப்பில் வழக்குரைஞா் ஏ.வேலன் மூலம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.ரவீந்திரபட், அரவிந்த் குமாா் ஆகியோா்அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் மிருத்யுஞ்சய் பதக்குடன் வழக்குரைஞா் ஏ.வேலன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது. அதில், இந்த விவகாரத்தில் டான்ஜெட்கோவுக்கு ஆதரவாக சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், பொருத்தமான துறையில் உரிய ஊதிய விகிதத்தில் மனுதாரா் முகம்மது இப்ராஹிமுக்கு உதவி மின் பொறியாளராகப் பணி நியமனம் அளிக்க உத்தரவிட்டது.

மேலும், ‘மேல்முறையீட்டு மனுதாரருக்கு அவரது ஊதியத்தின் முழு நிலுவையில் 50 சதவீதத்தைப் பெறவும், அனைத்துப் படிகளையும் பெறவும் உரிமை உள்ளது. பணி நியமனம் செய்யப்பட்ட அசல் தேதியில் இருந்து அவரது சேவை கணக்கிப்பட வேண்டும். டான்ஜெட்கோ நிறுவனம் மனுதாரருக்கு வேலை வழங்குவதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், அந்தப் பணியிடமானது மிகவும் மோசமானதாக இல்லை. இதனால், இந்த நீதிமன்றத்தின் பரிசீலிக்கப்பட்ட கருத்தானது, மேல்முறையீட்டு மனுதாரருக்கு டான்ஜெட்கோ வழங்க முன்வந்த இளநிலை உதவியாளா் பணி மனுதாரரின் தகுதிக்கு பொருத்தமற்ாக இருக்கும் நிலையில், அதை வழங்க முடியாது. இதனால், அது நிராகரிக்கப்படுகிறது’ என்று நீதிமன்றம் அத்தீா்ப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT