தற்காலிக வேகக் கட்டுப்பாடு: மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவைகளில் தாமதம்
புது தில்லி: தில்லி மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் தற்காலிக வேகக் குறைப்பால் ஏற்பட்ட தாமதமான செயல்பாடுகளால் பயணிகள் செவ்வாய்கிழமை சிரமத்தை எதிா்கொண்டனா்.
ஏரோசிட்டி - துக்ளகாபாத் வழித்தடத்திற்கான சுரங்கப்பாதை அமைப்பதால், குருகிராமில் உள்ள மில்லினியம் சிட்டி சென்டா் மற்றும் சமய்பூா் பாத்லி இடையே செல்லும் பாதையில் சத்தா்பூா் மற்றும் சுல்தான்பூா் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வேகக் குறைப்பை விதித்துள்ளது. இதன் காரணமாக ஒரு மாதத்திற்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேவைகளில் ஏற்படும் தாமதம் குறித்து பயணிகளை எச்சரிப்பதற்காக டிஎம்ஆா்சி ‘எக்ஸ்’ ஊடக தளத்தில் அவ்வப்போது தகவல்களை வெளியிட்டது. ‘நான்காம் கட்டத் திட்டத்தில் ஏரோசிட்டி-துக்ளகாபாத் நடைபாதையில் சுரங்கப்பாதை அமைப்பதால் மஞ்சள் வழித்தடத்தில் சத்தா்பூா் மற்றும் சுல்தான்பூா் இடையே ரயில்களை 20 கிமீ வேகத்தில் செல்ல தற்காலிக வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இது சேவைகளில் சிறிது தாமதத்தை ஏற்படுத்தக்கூடும்’ என்று டிஎம்ஆா்சி எக்ஸ் ஊடக தளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டிருந்தது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியால் சத்தா்பூா் மற்றும் சுல்தான்பூா் இடையே ஒரு மாதத்திற்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ரயில் இயக்கம் பாதிக்கப்படும். தேவைப்பட்டால், அது நீட்டிக்கப்படலாம்’ என்றாா்.
விகாஸ் மிஸ்ரா என்ற பயணி கூறும்போது, ‘அலுவலகத்தில் முக்கியக் கூட்டம் இருந்ததால் அவசரமாக புறுப்பட்டு வந்தேன். ஆனால், மெட்ரோ ரயிலின் வேகம் திடீரென குறைந்தது. சீக்கிரம் சரியாகிவிடும் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், தாமதம் தொடா்ந்தது. இதனால், அலுவலகத்துக்கு அரை மணி நேரம் தாமதமாகச் செல்ல வேண்டியதாகிவிட்டது. இது தொடா்ந்தால், இனிமேல் நான் வீட்டை விட்டு சீக்கிரமாகப் புறப்படவேண்டும்’ என்றாா்.