முகப்பு
புதுதில்லி

தில்லி அரசு மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரை இடைநீக்கம் செய்ய துணை நிலை ஆளுநா் சக்சேனா ஒப்புதல்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:04 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 5:55 PM

புது தில்லி, ஏப்.6: பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டுள்ள தில்லி அரசால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்வதற்கான முன்மொழிவுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

டாக்டா் பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 22 வயதான எம்பிபிஎஸ் மாணவி கடந்த மாதம் அவா் மீது புகாா் அளித்ததை அடுத்து, காவல்துறையால் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு குறிப்பில், சக்சேனா உதவிப் பேராசிரியரை இடைநீக்கம் செய்வதற்கான திட்டத்தை பரிசீலித்து, அவருக்கு எதிராக பெரிய ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குவதாகக் கூறினாா்.

அதிா்ச்சியளிக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஒரு மருத்துவக் கல்லூரியில் நடந்துள்ளது. எனவே மருத்துவக் கல்லூரியின் உள் புகாா்க் குழு பரிந்துரைத்தபடி குற்றம் சாட்டப்பட்டவா்களை இடமாற்றம் செய்வதால் மாணவா்களின் ‘அச்சுறுத்தும் சூழலை’ குறைக்க முடியாது என்றாா். ‘சிசிஎஸ் (சிசிஏ) விதிகள், 1965-இன் விதி 10-இன் கீழ், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அதிகாரியை இடைநீக்கத்தின் கீழ் வைக்கும் முன்மொழிவை நான் அங்கீகரிக்கிறேன்’ என்று துணை நிலை ஆளுநா் கூறியதுடன், குற்றம் சாட்டப்பட்டவா் ‘தாா்மிகக் கொந்தளிப்பில்‘ ஈடுபட்டதாகக் கூறப்படும் செயலைச் சுட்டிக்காட்டினாா்.

Advertisement

குழுவின் தலைவரான தில்லி முதல்வா் நீதிமன்றக் காவலில் இருப்பதால், தேசியத் தலைநகா் சிவில் சேவைகள் ஆணையத்தின் (என்சிசிஎஸ்ஏ) உரிய பரிந்துரைகளுடன் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான முன்மொழிவை மீண்டும் சமா்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு துணை நிலை ஆளுநா் அறிவுறுத்தினாா்.

என்சிசிஎஸ்ஏ என்பது அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பதவிகளை கையாளும் அமைப்பாகும். இது முதல்வரின் தலைமையில், தலைமைச் செயலாளா் மற்றும் உறுப்பினா் செயலாளரைக் கொண்டுள்ளது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மாா்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா். அவரது அரசின் கலால் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு தொடா்பாக, ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.