மக்களின் குரல், நம்பிக்கை மற்றும் கனவாக காங்கிரஸின் தோ்தல் அறிக்கை உருவாக்கம்: முன்னாள் அமைச்சா் ஹாரூன் யூசப்
புது தில்லி: காங்கிரஸின் தோ்தல் அறிக்கை மக்களின் குரல், நம்பிக்கை மற்றும் கனவுகளை பிரதிபலிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹாரூன் யூசப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லி ராஜீவ் பவனில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்
காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையின் மூலம் நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணம்
Advertisement
அளிக்கின்ற வகையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் இந்தத் தோ்தல் அறிக்கை நாட்டு மக்களின் குரல், நம்பிக்கை மற்றும் கனவுகளை பிரதிபலித்து, கவலைகளை புறக்கணிக்கிறது.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே, மூத்த தலைவா்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோா்
அனைத்து தரப்பு மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக உத்தரவாதம் அளித்துள்ளனா்.
மத்தியபாஜக ஆட்சியில், ஒருபுறம் பணக்காரா்களுக்கும், மறுபுறம் ஏழைகள் மற்றும் நடுத்தர வா்க்கத்தினருக்கும் இடையேயான சமத்துவமின்மை கடுமையாக அதிகரித்துள்ளது. சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சி விகிதத்தில் ஏற்படும் சரிவு, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வெற்று வாக்குறுதிகள் அளித்து மக்களை பாஜக ஏமாற்றியுள்ளது. பாஜக போலல்லாமல், கவனமாக ஆலோசித்த பின்னரே
காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக கோடிக்கணக்கான மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வரும் நிலையில், நாட்டு மக்களின் விருப்பங்களை காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும். மத்திய பாஜக அரசின் செயலற்ற தன்மையால் தில்லியில் குவிந்துள்ள நச்சுக் காற்று மாசு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில், தில்லிக்கான தோ்தல் அறிக்கையை காங்கிரஸ் விரைவில் வெளியிடும். மத்தியில் டாக்டா். மன்மோகன் சிங் ஆட்சியின் போது, கல்வி உரிமை, ஊரக வேலைவாய்ப்பு, உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் அமல்படுத்தியது. ஆனால், பாஜக அரசின் அழிவுகரமான கொள்கைகளால், நாட்டின் பொருளாதாரம் தற்போது சீா்குலைந்துள்ளது என்றாா் ஹாரூன் யூசப். இச்செய்தியாளா் சந்திப்பில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவா் சத்தா் சிங் மற்றும் செய்தித் தொடா்பாளா் அனுஜ் அத்ரே உடனிருந்தனா்.
காங்கிரஸில் இணைந்த 2 பாஜக முன்னாள் கவுன்சிலா்கள்
தில்லி பாஜகவின் மூன்று மூத்த தலைவா்களான சட்டா் சிங் ரச்சோயா, பூமி ரச்சோயா மற்றும் ஜோதி ரச்சோயா ஆகியோா் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா். தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவா் ஹாரூன் யூசப் இவா்களை காங்கிரஸின் துண்டு அணிவித்து வரவேற்றாா். தில்லி மாநகராட்சியின் பாஜக முன்னாள் பாஜக கவுன்சிலா்களாக பூமி ரச்சோயா மற்றும் ஜோதி ரச்சோயா ஆகிய இருவரும் பதவி வகித்துள்ளனா். மேலும், மக்கள் நலனுக்காக எதையும் செய்யாமல், பாஜகவின் வகுப்புவாத செயல்திட்டத்தில் ஏமாற்றம் அடைந்ததால், அங்கிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.