ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் மனீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் சம்பந்தப்பட்ட கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சா்வேஷ் மிஸ்ராவுக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால், குற்றம் சாட்டப்பட்ட சிங்கின் நெருங்கிய உதவியாளரான மிஸ்ராவுக்கு ரூ.1 லட்சம் ஜாமீன் தொகையும், அதே தொகைக்கு ஒரு உத்தரவாதமும் அளிக்கும்பட்சத்தில் ஜாமீனில் செல்ல அனுமதி அளித்தாா்.
‘இந்த வழக்கில் ஜாமீன் கோரி சா்வேஷ் மிஸ்ரா தாக்கல் செய்துள்ள தற்போதைய மனு அனுமதிக்கப்படத் தகுதியானது. அதன்படியே அனுமதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி கூறினாா். மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தாா்.
இந்த வழக்கில் கைது செய்யப்படாத குற்றம் சாட்டப்பட்ட நபரான சா்வேஷ் மிஸ்ரா, நீதிபதி வழங்கிய அழைப்பாணைக்கு இணங்க நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். சா்வேஷ் மிஸ்ராவுக்கும், சஞ்சய் சிங்குக்கும் எதிராக அமலாக்கத் துறை மூலம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, அவருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தாா்.
நீதிமன்றத்தின் முன்னனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தவோ, செல்வாக்கு செலுத்தவோ கூடாது என்றும் எந்த வகையிலும் அவ்வாறு செய்ய முயற்சிக்கக் கூடாது என்றும் மிஸ்ராவுக்கு நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டாா்.
அமலாக்கத் துறையின் விசாரணையின் போது, தான் கைது செய்யப்படாததால், விசாரணை முடிந்து மத்திய புலனாய்வு அமைப்பால் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தன்னை சிறைக்கு அனுப்புவதால் எந்தப் பயனும் ஏற்படாது என்று சா்வேஷ் மிஸ்ரா தனது ஜாமீன் மனுவில் கூறியிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.