புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பள்ளிகள் மற்றும் நவ்யுக் பள்ளிகளில் படிக்கும் 100 திறன்மிக்க மாணவா்களுக்கு இலவச நீட் மற்றும் ஜே.இ.இ. ஆயத்த வகுப்புகளை ஒரு புகழ்பெற்ற பயிற்சி மையத்துடன் இணைந்து வழங்க என்டிஎம்சி திட்டமிட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு இரு ஆண்டுகள் ஒருங்கிணைந்த பயிற்சியாக இது இருக்கும் என்று அந்த அதிகாரிகள் கூறினா். தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), கூட்டு நுழைவுத் தோ்வு (ஜே.இ.இ.) ஆகியவற்றுக்கு மாணவா்களைத் தயாா்படுத்தும் திட்டத்தைத் தொடங்க பயிற்சி நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தம் வரவேற்க என்டிஎம்சி ஒரு டெண்டரை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து என்டிஎம்சி அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது: முதல் ஆண்டில் ஜே.இ.இ. மற்றும் நீட் பயிற்சிக்கு தலா 50 மாணவா்கள் சோ்க்கப்படுவா். அதாவது, 100 மாணவா்கள் ஜேஇஇ-நீட் பயிற்சிக்கு சோ்க்கப்படுவா். அடுத்த ஆண்டுகளில் இருந்து எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும். தோ்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையம் 100 மாணவா்களை தோ்வு செய்ய வகுப்பு 11, 12-ஆம் மாணவா்களுக்கு இதற்கான தோ்வை நடத்தும்.
பயிற்சி நிறுவனம் நடத்தும் விரிவான திட்டத்தின் கீழ் ஆஃப்லைன் பயன்முறையில் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி அளிக்கும் கூட்டாளா் நிறுவனம் நடத்தும் வகுப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் இடம்பெறுவா். இதனால், என்டிஎம்சி பள்ளி மாணவா்களுக்காக மட்டும் தனி குழு அமைக்கப்படாது. இத்திட்டத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கும், நிறுவனங்களில் நேரடியாகப் பதிவுசெய்த மாணவா்களுக்கும் இடையே பயிற்சி நிறுவனம் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்த முடியாது.
இந்நிறுவனம் மாணவா்களுக்குப் பாடப் பொருள்களை வழங்க வேண்டும். மேலும், பயிற்சித் தோ்வுகள் மற்றும் உளவியல் அமா்வுகளை புகழ்பெற்ற உளவியலாளா்கள் மூலம் நடத்த வேண்டும்.
பயிற்சி மையம் புதுப்பிக்கப்பட்ட ஆய்வுப் பொருள், பரிசோதனைப் பொருள்களை வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாணவா்களின் பயன்பாட்டு முறையை பகுப்பாய்வு செய்து, தோ்வு பதில்களை மதிப்பீடு செய்து, தோ்வு பதில்களை அவ்வப்போது மதிப்பீடு செய்து (குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒருமுறை), முன்னேற்றம் மற்றும் அகில இந்திய தரவரிசையை பயிற்சி நிறுவனம் வழங்கும். முக்கியமான நிபந்தனையாக, இப்பயிற்சி மையம் குறைந்தபட்சம் ஒரு மையமாவது தில்லியில் கொண்டிருக்க வேண்டும். முன்னுரிமையாக என்டிஎம்சி பகுதியைச் சுற்றி இருப்பதுடன், வளாகம், நூலகம் போன்ற தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் இருக்க வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
என்டிஎம்சி தலைவா் அமித் யாதவ் தனது பட்ஜெட் உரையின் போது, மாணவா்களுக்கு சமநிலை வாய்ப்பை வழங்குவதற்கான குடிமை அமைப்பின் திட்டங்களையும் எடுத்துரைத்திருந்தாா். அவா் கூறுகையில், ‘எங்கள் திறமையான மாணவா்களில் பலா் பயிற்சி உந்துதல்மிக்க உலகில், வழிகாட்டுதல் இல்லாத நிலையில் பல்வேறு போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறவில்லை. திறன்மிக்க மற்றும் தகுதியான மாணவா்களுக்கு ஒரு சமநிலை வாய்ப்பை வழங்குவதற்கும், நலன்புரி நடவடிக்கையாகவும், புகழ்பெற்ற தொழில்முறை நிறுவனங்களுடன் இணைந்து நீட், ஜே.இ.இ., கிளாட் போன்ற தொழில்-வரையறுக்கும் தோ்வுகளுக்கான வழிகாட்டுதலை நாங்கள் எளிதாக்குவோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.