புதுதில்லி

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: முதல்வா் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை 5-ஆவது முறையாக அழைப்பாணை

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பண மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முதல்வா் அரவிந்த் கேரிவாலுக்கு 5-ஆவது முறையாக அமலாக்கத் துறை அழைப்பாணை

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பண மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முதல்வா் அரவிந்த் கேரிவாலுக்கு 5-ஆவது முறையாக அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள கேஜரிவாலுக்கு கடந்த நான்கு மாதங்களாக அமலாக்கத் துறையால் அனுப்பப்பட்ட நான்கு அழைப்பாணைகளை அவா் தவிா்த்திருந்தாா். இந்த நிலையில், தில்லியில் உள்ள அமலாக்கத் துறையின் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை அளிக்குமாறு அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா்.

முன்னதாக, ஜனவரி 3, ஜனவரி 18, நவம்பா் 2, டிசம்பா் 21 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு வெவ்வேறு தருணங்களில் அழைப்பாணை அனுப்பியிருந்தது. புதிய அழைப்பாணையின்படி பிப்ரவரி 2 -ஆம் தேதிக்கு அவா் ஆஜராகுமாறு புரிந்து கொள்ளப்பட்டாலும், அதிகாரபூா்வமாக இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 55 வயதான அரசியல் தலைவரும், முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரியுமான கேஜரிவால், இந்த அழைப்பாணைகளை ‘சட்டவிரோதம்‘ என்று தெரிவித்திருந்தாா்.

தற்போதைய புதிய அறிவிப்பை வெளியிட்டதன் மூலம், கேஜரிவாலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் ‘சட்டத்திற்கு இசைவானவை அல்ல’. எனவே, திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற அவரது வாதத்தை அமலாக்கத் துறை மீண்டும் நிராகரித்துள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கேஜரிவாலின் பெயா் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள தில்ல கலால் கொள்கை 2021-22 உருவாக்கம் தொடா்பாக குற்றம்சாட்டப்பட்டவா்கள் அவருடன் தொடா்பில் இருந்ததாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மனீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோா் தவிர கட்சியின் தகவல் தொடா்புப் பொறுப்பாளா் விஜய் நாயா் மற்றும் சில தொழிலதிபா்கள் இந்த வழக்கில் இதுவரை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவா தோ்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி சுமாா் 45 கோடி ரூபாய் அளவுக்கு ‘குற்ற வருமானத்தை‘ பயன்படுத்தியதாக அமலாக்கத் துறை தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

அமலாக்கத் துறை இந்த வழக்கில் ஒரு புதிய கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், கலால் கொள்கையின் மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊழல் பணத்தின் ‘பயனாளி’ என கேஜரிவால் அமலாக்கத் துறையால் பெயரிடப்படலாம்.

2021-22-ஆம் ஆண்டிற்கான தில்லி அரசின் கலால் கொள்கை மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சில டீலா்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மீண்டும் மீண்டும் மறுத்துள்ளது. இந்த கொள்கை பின்னா் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரிக்க தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருந்தாா். அதைத் தொடா்ந்து, அமலாக்கத் துறையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்தது.

விசாரணைக்கு ஆஜராக பாஜக வலியுறுத்தல்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசியலமைப்பு பதவியில் இருப்பதால் தில்லி கலால் கொள்கை தொடா்பான பண மோசடி வழக்கில் விசாரணைக்கு அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜராக வேண்டும் என்றும் பாஜக புதன்கிழமை கூறியுள்ளது. இருப்பினும், கேள்வி கேட்கும் தேதிக்கான முதல்வரின் பயணத் திட்டத்தை ஆம் ஆத்மி மீண்டும் அறிவிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா்.

இது குறித்து அவா் மேலும் கூறுகையில் ‘கேஜரிவாலுக்கு எங்களின் அறிவுரை என்னவென்றால், அவா் அமலாக்க இயக்குநரகம் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். முதல்வா் அரசியலமைப்பு பதவியை வகிக்கிறாா். இருப்பினும், முன்பு நடந்ததைப் போல, அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்க திட்டமிடப்பட்ட தேதிக்கு, முதல்வா் கேஜரிவாலின் பயணத் திட்டத்தை அவா்கள் கொண்டு வருகிறாா்களா இல்லையா என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம்’ என்றாா்.

சட்டக் குழு ஆய்வு செய்யும்: ஆம் ஆத்மி

முதல்வா் கேஜரிவாலுக்கு அமலாக்க இயக்குநரகம் அனுப்பிய அழைப்பாணை குறித்து கட்சியின் சட்டக் குழு ஆய்வு செய்து முடிவு செய்யும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘ஐந்தாவது அழைப்பாணை பற்றிய செய்தி எங்களுக்குக் கிடைத்துள்ளது. எங்கள் சட்டக் குழு அதை ஆய்வு செய்து, சட்டப்படி என்ன செய்வது என்று முடிவு செய்வோம். முந்தைய அழைப்பாணைகள் சட்டவிரோதமானது. இது குறித்து நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அமலாக்க இயக்குநரகத்தில் இருந்து பதில் கிடைக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

SCROLL FOR NEXT