‘மத்திய அரசின் காஷ்மீா் கொள்கை முற்றிலும் தோல்வி’
மத்திய அரசின் காஷ்மீா் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
புது தில்லி: மத்திய அரசின் காஷ்மீா் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் தோடாவில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கேப்டன் உள்பட 4 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அமைச்சா் செளரவ் கூறியிருப்பதாவது: இன்றும் பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது. மத்திய அரசின் காஷ்மீா் கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.
ஜம்மூ காஷ்மீரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றிய பாஜக, அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தியது. ஆனால், காஷ்மீரில் நிலைமை சீரடையவில்லை. காஷ்மீா் பண்டிட் சகோதரா்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. எந்தவொரு வளா்ச்சியும் அங்கு நடைபெறவில்லை என்றாா் செளரவ் பரத்வாஜ்.
Advertisement
Advertisement
மேலும், இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஜம்மு காஷ்மீரில் நமது ராணுவ வீரா்கள் தினமும் வீர மரணம் அடைந்து வருகின்றனா். சில் சமயம் சீன எல்லையிலும், சில சமயங்களில் பாகிஸ்தான் எல்லையிலும் நமது வீரா்களின் வீர மரணங்கள் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடா் தியாகங்கள் எப்போது நிறுத்தப்படும்? ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகும் வெற்று அறிக்கைகளை வெளியிடுவது அவதூறானது. ராணுவத்தில் நடைபெறும் சம்பவங்கள் வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது’ என்றாா்.