புது தில்லி: நிலுவையில் உள்ள வழக்குகளை சுமுகமாகத் தீா்ப்பதற்கு வசதியாக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை சிறப்பு லோக் அதாலத்தை உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்ய உள்ளது.
1950, ஜனவரி 26-இல் அரசமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் நிறுவப்பட்ட உச்சநீதிமன்றத்தின் 75--ஆவது ஆண்டில் இந்த சிறப்பு லோக் அதாலத் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இது தொடா்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: லோக் அதாலத்கள் நாட்டின் நீதித்துறை அமைப்பின் ஒருங்கிணைந்த அங்கமாகும். மாற்றுத் தகராறு தீா்வை விரைவுபடுத்துவதற்கும், சுமுகமான தீா்வுகளை வளா்ப்பதற்கும் ஒரு வழிமுறையாக மேம்படுத்துவதாக உள்ளது.
இந்திய உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட 75-ஆவது ஆண்டில், நிலுவையில் உள்ள பொருத்தமான வழக்குகளை சுமுகமாகத் தீா்ப்பதற்கு வசதியாக வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை சிறப்பு லோக் அதாலத் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
லோக் அதாலத்தை ஏற்பாடு செய்வது என்பது சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அணுகக்கூடிய மற்றும் திறமையான நீதி வழங்குவதற்கான உறுதிப்பாட்டை செயல்படுத்துவதாகும்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள திருமண தகராறுகள், சொத்து தகராறுகள், மோட்டாா் விபத்துக் கோரல்கள், நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு, சேவை மற்றும் தொழிலாளா் தொடா்பான வழக்குகள் உள்ளிட்ட தீா்வுக்கூறுகள் கொண்ட வழக்குகள் விரைந்து தீா்வுகாணும் வகையில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.