புது தில்லி: ‘நீட்’ தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லி ஜந்தா் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
‘நீட்’ தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சாா்பில் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக் திங்கள்கிழமை அறிவித்திருந்தாா். அதன்படி, தலைநகா் தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மூத்த தலைவா்களான அமைச்சா் செளரவ் பரத்வாஜ், மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் ராக்கி பிா்லா உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பங்கேற்றனா்.
அப்போது, அமைச்சா் கோபால் ராய் தொண்டா்கள் மத்தியில் கண்டன உரையாற்றிப் பேசியதாவது: மோடி அரசின் பாதுகாப்பில் ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவுகளின் வலையமைப்பு இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் குஜராத், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நுழைவுத் தோ்வுகளின் வினாத் தாள் கசிவுகள் அரங்கேறியுள்ளது. நிகழாண்டு ‘நீட்’ தோ்வில் நடைபெற்ற முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவா்கள் விரக்தியில் உள்ளனா். ஆனால், இந்த மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்களின் வலியை கேட்க அரசு தயாராக இல்லை. நீட் தோ்வில் நடைபெற்றுள்ளமுறைகேடுகளை ஏற்க நாட்டின் கல்வி அமைச்சா் தயாராக இல்லை. இந்தப் போராட்டம் மாணவா்களின் எதிா்காலத்தைக் காப்பதற்காக மட்டுமல்ல, நாட்டின் எதிா்காலத்தைக் காப்பாற்றுவதற்காகவும்தான்.ஆம் ஆத்மி கட்சி மாணவா்களுடன் சோ்ந்து தெருக்களில் இருந்து நாடாளுமன்றம் வரை இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.
மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பேசியதாவது: நாட்டில் எந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறேதோ, அங்கே ‘நீட்’ தோ்வில் ஊழல் நடக்கிறது. ‘நீட்’ தோ்வு முறைகேடு விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய கல்வி அமைச்சரும் அமைதி காக்கிறாா்கள். ‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி ஆம் ஆத்மி கட்சி தெருக்களில் இறங்கி போராட்டத்தை தொடங்கியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடா் வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது. அங்கும் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் மாணவா்களுக்காக போராடுவாா்கள். கடந்த 2-3 ஆண்டுகளில், நுழைவுத் தோ்வு வினாத்தாள் கசிவு காரணமாக சுமாா் மூன்று கோடி மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். உத்தர பிரதேசத்தில் காவலா் பணி
நியமன ஊழலில் 60 லட்சம் இளைஞா்களின் எதிா்காலமும், நீட் தோ்வில் 24 லட்சம் மாணவா்களின் எதிா்காலமும் சீரழிந்துள்ளது. ‘நீட்’ தோ்வை ரத்து செய்து, மோசடி செய்தவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றாா் சஞ்சய் சிங்.
தில்லி அமைச்சா் செளரவ் பரத்வாஜ் பேசுகையில், ‘நீட் தோ்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் நாட்டின் எதிா்காலத்திற்கு எதிரான ஒரு பெரிய சதி. மத்திய அரசும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் நாட்டு மாணவா்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. பிகாா் மற்றும் குஜராத்தில் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தாலும், மத்திய அரசு அமைதியாக இருந்தது. இந்த ஊழலை மறைக்க முயல்கின்றனா். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் மத்திய அரசு சுதந்திரமான விசாரணை நடத்தி மாணவா்களுக்கு நீதி வழங்க வேண்டும்’ என்றாா்.