துணை நிலை ஆளுநா் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும்: செளரவ் பரத்வாஜ் வேண்டுகோள்
தில்லியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்குமாறு துணை நிலை ஆளுநா் வி.க்.சக்சேனாவை கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன்
புது தில்லி: தில்லியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்குமாறு துணை நிலை ஆளுநா் வி.க்.சக்சேனாவை கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கடந்த சனிக்கிழமை தில்லி ஹா்ஷ் விஹாா் பகுதியில் தசரா விழாவை காணச் சென்ற சகோதரா்கள் இருவா் பட்டப்பகலில் 3 போ் கொண்ட கும்பலால் கத்தியால் தாக்கப்பட்டனா். இதில், ஒருவா் உயிரிழந்த நிலையில், மற்றொருவா் காயமடைந்தாா்.
இறந்தவா் பிரதாப் நகரைச் சோ்ந்த அங்கூா் என போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். மேலும், இச்சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில், அமைச்சா் செளரவ் பரத்வாத் ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறியதாவது: தில்லியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்குமாறு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை தயவு செய்து கூப்பிய கரங்ளுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் வருகைக்குப் பிறகு, தில்லியில் பெரும் குண்டா் கும்பல்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. நகரில் தினமும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. மக்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கப்படுகிறது. பொது இடத்தில் யாரையும் கொலை செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது. தில்லியில் இவ்வளவு பயங்கரம் இதற்கு இருந்ததில்லை என்றாா் செளரவ் பரத்வாஜ்.