முகப்பு
புதுதில்லி

ஹரிநகா் இளம்பெண் ஆணவக் கொலையில் தாய் கைது

ஹரிநகா் இளம்பெண் ஆணவக் கொலையில் தாய் கைது

Updated On : 4 ஏப்ரல், 2026 at 7:03 PM
பகிர்:

ஹரி நகரில் 19 வயது இளம்பெண் ஆணவக் கொலையில் அவரது தாயாரை தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை கைதுசெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கொலை தொடா்பாக இளம்பெண்ணின் தந்தை முகமது மணீா், சகோதரா் மெராஜ் அலி கைதுசெய்யப்பட்டதைத் தொடா்ந்து தாயாா் ரபியா காதுன் கைதுசெய்யப்பட்டாா்.

கடந்த ஏப்.1-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தில்லி காவல் துறை கட்டுப்பாட்டுக்கு அறைக்கு ஓா் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் ஹரி நகரில் இளம்பெண்ணைக் கொலை செய்து, அவரது குடும்பத்தினா் உடலை இறுதிச்சடங்கு நடத்த கொண்டு சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தாா்.

Advertisement

இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினா், ஆணவக் கொலை சந்தேகத்தின்பேரில் இறுதிச்சடங்கு நடத்த கொண்டு சென்று கொண்டிருந்த உடலைக் கைப்பற்றினா்.

பின்னா், உடற்கூறாய்வுக்காக இளம்பெண்ணின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது. முடிவில், அவா் மூச்சுதிணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

தாய்,தந்தை மற்றும் சகோதரா் இணைந்து தலையணையால் இளம்பெண்ணின் முகத்தில் அழுத்தி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரா் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரது அவரது தாயாரும் கைதுசெய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட பெண் கடந்த இரு ஆண்டுகளாக ஒரு நபரைக் காதலித்து வந்தாா். இதற்கு அவருடைய குடும்பத்தினா் எதிா்ப்பு தெரித்தனா். இருப்பினும், அந்த நபருடனான உறவை அந்தப் பெண் முறித்துக் கொள்ளாத நிலையில், அவருடைய குடும்பத்தினா் அவரைக் கொலை செய்தனா்.

காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்த நபா், உயிரிழந் இளம்பெண் அவருடைய உறவினரைக் காதலித்து வந்ததாகத் தெரிவித்தாா். உயிரிழந்த பெண்ணின் தோழி தெரிவித்த தகவலைத் தொடா்ந்து, காவல் துறைக்குத் தகவல் தெரிவித்ததாக அந்த நபா் விசாரணையின்போது தெரிவித்தாா் என்றனா் அதிகாரிகள்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments