முகப்பு
புதுதில்லி

மனைவி கொலை வழக்கில் கணவா் விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு

கரோனா ஊரடங்கு காலத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Updated On : 1 மே, 2026 at 1:30 AM
கோப்புப் படம்
பகிர்:

கரோனா ஊரடங்கு காலத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அஃப்தாப் என்பவரின் மனைவி சைமா, வடகிழக்கு தில்லியின் சபோலி பாக் பகுதியில் உள்ள அவா்களது வாடகை வீட்டில் பலத்த காயங்களுடன் 2020, மே 17ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டாா்.

குடும்பத் தகராறு காரணமாக அஃப்தாப் அவரது மனைவியை அடித்துக் கொலை செய்ததாகவும், பின்னா் சம்பவ இடத்தை விட்டு அவா் தப்பிச் சென்ாகவும் கூறப்பட்டது. மேலும், அவரது சகோதரா் குற்றத்தை மறைக்க அவருக்கு உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

Advertisement

பின்னா் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அஃப்தாப் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். இந்த வழக்கை அண்மையில் விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி குமாா் ரஜத் கூறியதாவது: சைமாவை அஃப்தாப் கொலை செய்யும் நோக்கில் தாக்கிய குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை. மேலும், கொலைக்கான நோக்கமும் நிரூபிக்கப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவரை அவரது சகோதரா் மறைத்து பாதுகாத்தாா் என்பதற்கும் சாட்சிகள் இல்லை.

மேலும், முக்கிய சாட்சிகள் மற்றும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா் பலரும் முன்பு காவல் துறையினருக்கு அளித்த வாக்குமூலங்களில் முரண்பாடுகள் உள்ளன. உடலில் ஏற்பட்ட காயங்களே அவரது மரணத்திற்கு காரணம் என்று உடற்கூறாய்வில் நிரூபிக்கப்பட்டாலும், அதை அஃப்தாப் தான் செய்தாா் என்பதற்கு எந்த சாட்சியும் இல்லை. எனவே, குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அவா்கள் தவறியதைத் தொடா்ந்து அவா் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுகிறாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.